மத்திய அரசு அவசரச் சட்டத்தை கொண்டு வந்திருந்தாலும் ஜல்லிக்கட்டுக்கு தடை கோரியிருக்க முடியும் என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
இது தொடர்பாக அவர் சென்னையில் புதன்கிழமை கூறியதாவது: ஜல்லிக்கட்டு நடத்துவதற்காக மாணவர்களும், இளைஞர்களும் திரண்டு அறவழியில் போராடுவது உணர்வுப்பூர்வமானது. எழுச்சிமிக்கது. அவர்களின் போராட்டத்தை கொச்சைப்படுத்த முடியாது.
ஜல்லிக்கட்டு கண்டிப்பாக நடைபெற வேண்டும். அதற்கு விதிக்கப்பட்டுள்ள தடை நிரந்தரமாக நீங்க வேண்டும் என்ற உணர்வில்தான் நாங்கள் இருக்கிறோம். மத்திய அரசு அவசரச் சட்டம் கொண்டு வந்திருந்தாலும் உச்ச நீதிமன்றத்தால் தடை செய்ய முடியும். அப்படி ஒரு சூழ்நிலை வரக்கூடாது என்பதற்காகவே கவனமுடன் இந்த பிரச்னையை அணுகி வருகிறோம். மாணவர்கள் போராட்டத்தில் அரசியலுக்கு இடம் தரக் கூடாது.
தடை செய்யப்பட்ட ஒன்றை நடத்தினால் அதற்குப் பெயர் போராட்டம்தான், ஜல்லிக்கட்டு இல்லை. இந்தப் போராட்டத்தில் சில அமைப்புகள் ஊடுருவியிருப்பது கவனிக்கத்தக்கது. மாணவர்களின் அறப்போராட்டத்தை கனிவோடு அணுக வேண்டும். அவர்கள் மீது தடியடி நடத்தியிருப்பது கண்டனத்துக்குரியது என்றார் அவர்.