இன்றுடன் நிறைவு பெறுகிறது சென்னை புத்தகக் கண்காட்சி "பபாசி' கவனத்துக்கு..

சென்னையில் நடைபெற்று வரும் 40-ஆவது புத்தகக் கண்காட்சி வியாழக்கிழமையுடன் நிறைவு பெறுகிறது.
இன்றுடன் நிறைவு பெறுகிறது சென்னை புத்தகக் கண்காட்சி "பபாசி' கவனத்துக்கு..

சென்னையில் நடைபெற்று வரும் 40-ஆவது புத்தகக் கண்காட்சி வியாழக்கிழமையுடன் நிறைவு பெறுகிறது.
தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் ("பபாசி') சார்பில் 40-ஆவது புத்தகக் கண்காட்சி, சென்னை செயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் பள்ளியில் நடைபெற்று வருகிறது. கடந்த 6-ஆம் தேதி இந்தக் கண்காட்சி தொடங்கியது. இது வியாழக்கிழமையுடன் நிறைவு பெறுகிறது.
இந்தக் கண்காட்சியில் நூற்றுக்கணக்கான பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சுமார் 700 அரங்குகளை அமைத்து தங்களது புத்தகங்களை விற்பனை செய்து வருகின்றனர். மேலும் லட்சக்கணக்கான வாசகர்கள் தமிழகத்தின் பல ஊர்களில் இருந்து வந்து புத்தகங்களை வாங்கி செல்கின்றனர். இந்த நிலையில் கண்காட்சி நிறைவு விழா வியாழக்கிழமை மாலை நடக்கிறது.
சிறப்பு ஏற்பாடுகள்: இந்த புத்தகக் கண்காட்சிக்கு வரும் வாசகர்களின் வசதிக்காக கழிப்பிட வசதி, வாகன நிறுத்தம் வசதி, உணவு வசதி என அனைத்து வசதிகளையும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் செய்திருந்தது. வாசகர்கள் மட்டுமல்லாமல், அரங்குகளில் பணியாற்றுவோருக்காகவும் பல ஏற்பாடுகள் செய்திருந்தன. அவர்களுக்காக குடிநீர் வசதி, உணவு வசதியும் தனியாக செய்யப்பட்டிருந்தது. தாற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்தாலும் கழிப்பிடங்களில் தண்ணீர் வசதியும் செய்யப்பட்டிருந்தது.
மேலும், அதிக எண்ணிக்கையில் வாகனங்கள் வந்தால், அவற்றை நிறுத்த பச்சையப்பன் கல்லூரியிலும் வாகன நிறுத்தம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பச்சையப்பன் கல்லூரியில் வாகனங்களை நிறுத்துவோரை அழைத்து வர வேன் வசதியும் இருந்தது.
புத்தகக் கண்காட்சியில் "பபாசி' செய்திருந்த முழுமையான ஏற்பாடுகளில் அதன் 40 ஆண்டுகால அனுபவம் தெளிவாக தெரிந்தது.
பண மதிப்பிழப்பு மற்றும் பணத் தட்டுப்பாட்டை சமாளிக்க புத்தகக் காட்சி வளாகத்தில் தாற்காலிக ஏடிஎம் மையங்கள், ஸ்வைப்பிங் இயந்திர வசதி ஆகியவையும் செய்யப்பட்டிருந்தன.
பபாசி கவனத்துக்கு...கடந்த ஆண்டை விட அதிக எண்ணிக்கையிலான அரங்குகள் அமைக்கப்பட்டிருந்ததால், வரிசையாக அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. இதனால், அரங்குகளைச் சுற்றிப் பார்த்து விட்டு ஓய்வுக்காக அமர வாசகர்களுக்கு இடமில்லாமல் போனது. இதன் காரணமாக முதிய வாசகர்களே அதிக அளவில் பாதிக்கப்பட்டனர்.
அதேபோல, இதுவரை இல்லாத அசைவம் உணவு வகைகளும் கண்காட்சி வளாகத்தில் கிடைத்தன. அதுபோக சீன வகை உணவுகள், சிறுதானிய உணவுகள், பழங்கள் ஆகியவையும் விற்கப்பட்டன. வாடகை அடிப்படையில் கடைகளை அனுமதித்திருந்தாலும், உணவுப் பொருள்களின் விலையை பபாசி கண்காணிக்கவில்லை.
அதனால், விற்பனையாளர்கள் அவரவர் விருப்பத்துக்கு விலையை நிர்ணயித்திருந்தனர். விலை அதிகம் என்பதால் பல வாசகர்கள் பசியோடும் இருக்கும் நிலை ஏற்பட்டது. மேலும், சில கடைகளில் அதிக கூட்டம் வருவதைக் கண்டு விலையை மீண்டும் ஏற்றி விட்டன. உதாரணமாக, முதலில் ரூ. 40-க்கு விற்கப்பட்ட தயிர், சாம்பார் சாத வகைகள் நாளாக நாளாக ரூ.50-க்கு விற்பனை செய்யப்பட்டன. வரவேற்பு இல்லாத கடைகள் வேறு வழியின்றி விலைகளை குறைத்தன.
அதேபோல, எந்த உணவுக் கடைகளிலும் இலவச குடிநீர் வழங்கப்படவில்லை. வாசகர்கள் தனியார் நிறுவனத்தின் குடிநீர் கேனை தனியாக விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலை இருந்தது.
மேலும் புத்தக அரங்கு அமைந்துள்ள பகுதியிலும் போதுமான அளவுக்கு குடிநீர் வசதி இல்லை. அங்கும் விலை கொடுத்து வாங்கும் நிலைக்கு வாசகர்கள் தள்ளப்பட்டனர்.
கழிவறைகளில் விளக்கு வசதி செய்யப்படவில்லை என்றும் சில வாசகர்கள் தெரிவித்தனர். மேலும் இதுபோன்ற குறைகளைக் களைந்துவிட்டால் அடுத்த ஆண்டு புத்தகக் கண்காட்சிக்கு வருவோர் மனநிறைவோடு வீட்டுக்குச் செல்வர் என்று வாசகர்கள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com