மகரிஷி வேத வியாசர் (தமிழில்
டாக்டர் எஸ். சுப்ரமண்ய சாஸ்திரி)
ஹிந்து மதத்தின் முதன்மையான கடவுள் சிவன். அவரின் வரலாறு மற்றும் திருவிளையாடல்களை, பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் மகரிஷி வேத வியாசர் வடமொழியில் எழுதினார். சிவனைப் பற்றிய புராணக் கதைகள் வடமொழியில் இருந்ததால் அவற்றை தமிழர்களால் படிக்க முடியாமல் இருந்தது.
இதுவரை, சிவ புராணம் செவி வழியாகவே சொல்லப்பட்டு வந்தது. ஒரு சிலர் சுருக்கமாக சிவ புராணத்தை தமிழில் எழுதியுள்ளனர். ஆனால், சிவ புராணத்தின் முழுமையையும் தமிழில் இதுவரை யாரும் மொழிபெயர்ப்பு செய்ததில்லை.
அந்த குறையை ஸ்ரீசிருங்கேரி சாரதா பீடம் மற்றும் ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் ஆஸ்தான வித்வான் டாக்டர் எஸ். சுப்ரமண்ய சாஸ்திரி நிவர்த்தி செய்துள்ளார். மகரிஷி வேத வியாசர் அருளிய ஸ்ரீசிவ மகாபுராணத்தையும் தமிழில் முழுமையாக அவர் மொழிபெயர்த்துள்ளார்.
அதை, ஹிந்து மதம் தொடர்பான பல நூல்களை வெளியிட்ட கீதா பிரஸ் வெளியிட்டுள்ளது.
அண்மையில் வெளியிடப்பட்ட இந்த புத்தகம் சென்னை புத்தகக் கண்காட்சியில் முதன்முறையாக விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. சிவ புராணம் முழுமையும் தமிழில் முதன்முதலில் கிடைப்பதால் பலர் இதனை ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர்.
ஸ்ரீசிவ மகாபுராணத்தை கதையாக மட்டும் மொழிபெயர்ப்பு செய்யாமல், வடமொழி பாடல்களை தமிழ் எழுத்துகளால் கொடுத்து, அதற்கு கீழே தமிழ் அர்த்தத்துடன் நூல் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த நூலை படிப்போர் வடமொழி மூலத்தையும் அதற்கு உண்டான தமிழ்ப் பொருளையும் ஒருசேர பெறும் வகையில் புத்தகம் அமைந்துள்ளது.
இந்தாண்டு அதிகம் விற்பனையாகும் ஆன்மிக நூல்களில் ஸ்ரீசிவ மகாபுராணம் பிரதானமாக உள்ளது.