தமிழகத்தில் வியாழக்கிழமை 460 இடங்களில் ஜல்லிக்கட்டு போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் 1.75 லட்சம் பேர் பங்கேற்றனர்.
இது குறித்த விவரம்:
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கடந்த நான்கு நாள்களாக தமிழகத்தில் போராட்டம் நடைபெற்று வருகிறது.
படிப்படியாக வேகம் எடுத்த இந்த போராட்டம் மாநிலம் முழுவதும் பெரும் பாதிப்பை வியாழக்கிழமை ஏற்படுத்தியது. மாநிலத்தில் வியாழக்கிழமை மட்டும் 460 இடங்களில் போராட்டம் நடைபெற்றது. இப் போராட்டத்தில் 1.75 லட்சம் பேர் பங்கேற்றுள்ளனர். தென் மாவட்டங்களிலும், டெல்டா மாவட்டங்களிலும் அதிகமான இடங்களில் இந்த போராட்டம் நடைபெற்றுள்ளது. போராட்டம் வெள்ளிக்கிழமையும் நீடித்தால், இடங்களின் எண்ணிக்கையும், பங்கேற்போரின் எண்ணிக்கையும் மேலும் பல மடங்கு அதிகரிக்கும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.