நாட்டில் பண மதிப்பிழப்பு அறிவிப்பு வெளியானதிலிருந்து பணத் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்த நிலையில், 40-ஆவது புத்தகக் கண்காட்சி தொடங்கியது. முதலில் பணத் தட்டுப்பாடு காரணமாக போதிய அளவுக்கு விற்பனை இருக்காது என்ற அச்சம் எழுந்தது.
இதனைச் சமாளிக்க, அனைத்து பதிப்பாளர்களையும் ஸ்வைப்பிங் இயந்திரம் பயன்படுத்த பபாசி கேட்டுக் கொண்டது. இதனையடுத்து, பெரும்பாலான அரங்குகளில் ஸ்வைப்பிங் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. மேலும், ஸ்வைப்பிங் இயந்திரம் இல்லாத அரங்குகளுக்கு உதவும் வகையில், 50 இயந்திரங்களை பபாசி ஏற்பாடு செய்திருந்தது. மேலும், சிட்டி யூனியன் வங்கி சார்பில் கண்காட்சி வளாகத்தில் 3 ஏடிஎம் மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
கண்காட்சியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஸ்வைப்பிங் இயந்திரங்களை பெரும்பாலான வாசகர்கள் பயன்படுத்தினர்.
மொத்த விற்பனையான ரூ. 18 கோடியில் சுமார் 70 சதவீதம் இந்த ஸ்வைப்பிங் இயந்திரங்களைப் பயன்படுத்தியே மேற்கொள்ளப்பட்டன.
மேலும் 3 ஏடிஎம் மையங்களையும் சுமார் 20,000 பேர் பயன்படுத்தியுள்ளனர். "பபாசி' ஏற்பாடு செய்திருந்த டோக்கன் வசதியையும் பல அரங்குகள் பயன்படுத்திக் கொண்டன என்று தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கச் செயலாளர் புகழேந்தி தெரிவித்தார்.