அரக்கோணத்தில் வேளச்சேரி விரைவு மின்சார ரயிலின் என்ஜின் முன் இளைஞர்கள் மறியல் போராட்டம் நடத்திய வேளையில் வேறு ரயிலே நிலையத்திற்கு வராததால், வேறு வழியின்றி அதே ரயிலின் பின்பக்கம் காப்பாளர் பெட்டிக்கு பின்னே திமுகவினர் மறியல் போராட்டம் நடத்தினர். ஒரே ரயிலின் இருபுறமும் நடைபெற்ற இந்த வித்தியாசமான ரயில் மறியல் போராட்டத்தால் ரயில்வே அதிகாரிகள் செய்வதறியாது தவித்தனர்.
ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி கடந்த நாண்கு நாட்களாக தமிழகம் முழுவதும் இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்திவரும் வேளையில் ஐந்தாவது நாளாக அரக்கோணத்தில் ரயில்மறியல் போராட்டம் துவங்கியது. காலை 7.50க்கு வேளச்சேரிக்கு புறப்படும் மின்சாரரயிலின் முன்புறம் என்ஜின் முன் கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் என ஆயிர்ககணக்காணோர் மறியலில் ஈடுபட்டனர். தொடர்ந்து இரண்டு மணி நேரமாக மறியல் நடைபெற்ற நிலையில் போராட்டம் நடத்திவர்களிடம் ஏஎஸ்பி சக்திகணேசன் பேச்சுவார்த்தை நடத்தியும் போராட்டம் முடிவுக்கு வரவில்லை. இதனால் தொடர்ந்து போராட்டம் நடைபெற்றது.
இந்நிலையில் திமுக தலைமை அறிவித்தபடி ரயில்மறிய்ல போராட்டம் நடத்த அரக்கோணம் ரயில்நிலையத்திற்கு வந்த திமுகவினர் இளைஞர்கள் மறியல் செய்துவந்த வேளச்சேரி ரயிலை தவிர வேறு ரயில் எதுவும் நிலையத்தில் இல்லாததால் மறியல் செய்யமுடியாத நிலையில் தவித்தனர். இதையடுத்து வேளச்சேரி ரயிலின் பின்புறம் காப்பாளர் பெட்டிக்கு பின்னே சென்ற மாவட்ட துணை செயலர் ராஜ்குமார் தலைமையிலான திமுகவினர், ரயிலின் பின்புறம் மறியல் செய்வது போல் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
இதில் மாவட்ட பொருளாளர் மு.கன்னைய்யன், நகர செயலர் ஐ.ராப்சன், ஒன்றிய செயலர்கள் அரக்கோணம் ஆர்.தமிழ்செல்வன், நெமிலி வடிவேல், தக்கோலம் பேரூர் செயலர் எஸ்.நாகராஜன், முன்னாள் ஒன்றிய செயலர் மோகன் உள்ளிட்ட பலர் இதில் பங்கேற்றனர். திமுகவினரின் பின்பக்க மறியலை நிலையத்தில் இருந்த பயணிகள் வித்தியாசமாக பார்த்தனர்.