ஜல்லிக்கட்டுக்கு அவசரச் சட்டத்தைக் கொண்டு வர தமிழக அரசு மேற்கொள்ளும் முயற்சிக்கு மத்திய அரசின் முழு ஆதரவு கிடைக்கும் என்று அதிமுக எம்.பி.க்களிடம் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதியளித்தார்.
தில்லியில் மக்களவை, மாநிலங்களவை அதிமுக குழுக்களின் தலைவர்கள் டாக்டர் பி.வேணுகோபால், நவநீதகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் அக்கட்சி உறுப்பினர்கள் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை வெள்ளிக்கிழமை சந்தித்தனர். இச்சந்திப்புக்குப் பிறகு மு.தம்பிதுரை செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் ஜல்லிக்கட்டை நடத்த வகை செய்யும் அவசரச் சட்ட முன்வடிவு தொடர்புடைய கோப்புகள் மத்திய உள்துறையிடம் அளிக்கப்பட்டுள்ளது. அதை உடனடியாக பரிசீலித்து உரிய ஒப்புதல் வழங்குமாறு ராஜ்நாத் சிங்கை கேட்டுக் கொண்டோம்.
மத்தியில் 2014-க்குப் பிறகு ஆட்சிக்கு வந்த பாஜகவும் இந்த விஷயத்தில் உரிய அக்கறை செலுத்தத் தவறிவிட்டது. காட்சிப்படுத்த தடை செய்யப்பட்டுள்ள விலங்குகள் பட்டியலில் இருந்து காளையை நீக்கும் நடவடிக்கைதான் இப்பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வாக இருக்கும். குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை அதிமுக எம்.பி.க்கள் சனிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு நேரில் சந்தித்து வலியுறுத்துவர் என்றார் தம்பிதுரை.