சென்னை: ஜல்லிக்கட்டு தொடர்பாக அவசர சட்டம் தேவையில்லை; நிரந்தர சட்டம்தான் தேவை என்றும் போராட்டங்கள் தொடரும் என்றும் போராட்டக்களத்தில் உள்ள மாணவர்களும், பொதுமக்களும் அறிவித்துள்ளதால் அலங்காநல்லூரில் நாளை ஜல்லிக்கட்டு நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
ஜல்லிக்கட்டு நடத்துவதற்காக மாணவர்கள் நடத்திய ஐந்து நாள் அற போராட்டத்தின் விளைவாக ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த அவசர சட்டம் ஒன்றை தமிழக அரசு இன்று மாலை பிறப்பித்துள்ளது.
ஆனால் இது தொடர்பாக நிரந்தரமாக சட்டத்தில் திருத்தம் தேவை என அலங்காநல்லூரில் போராடி வரும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அறிவித்துவிட்டனர். அங்கு கூடியிருந்த போராட்டக்காரர்கள் மத்தியில் பேசிய நிர்வாகிகள், முதல்வரே வந்தாலும் நாளை ஜல்லிக்கட்டு நடக்காது என அறிவித்தனர். இதை வரவேற்று மக்கள் கோஷமிட்டனர்.
நாளை ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பாக மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் விரிவான ஏற்பாடுகளை செய்து வருகிறார். அத்துடன் அலங்காநல்லூர் வாடிவாசல் பகுதிக்கு வந்து அங்குள்ள மக்களிடம் பேச்சு வார்தை நடத்தினார். ஆனால் நிரந்தர சட்டமே தீர்வு என அலங்காநல்லூர் மக்கள் கோஷமிட்டனர். அத்துடன் இதில் தங்களுக்கு விருப்பம் இல்லை என்றும் அறிவித்தது விட்டனர்.
இதே போலவே சென்னை மெரினா கடற்கரையில் கூடியுள்ள மாணவர்கள் மற்றும் தமிழகத்தின் பிற பகுதியில் உள்ள போராட்ட களத்தில் உள்ளவர்களும் இதே முடிவை எடுத்து விட்டனர். போராட்டங்கள் தொடர உள்ளது.
தற்போதைய கள நிலவரம் முழுமையாக அரசுக்கு எதிராக இருக்கிறது. இத்துடன் நாளை காளைகளை அவிழ்த்துவிட மாட்டோம் என்று மாடு வளர்ப்போர் சங்கத்தினரும் அறிவித்துள்ளனர். இதனால் அலங்காநல்லூரில் அரசு திட்டமிட்டபடி நாளை காலை 10 மணிக்கு ஜல்லிக்கட்டு நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.