சென்னை: ஜல்லிக்கட்டுக்கான அவசரச் சட்டத்தில், மத்திய அரசும், குடியரசுத்தலைவரின் கையெழுத்தும் ஒரே நாளில் பெறப்பட்டதாக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் குறிப்பிட்டுள்ளார்.
ஜல்லிக்கட்டுக்கான அவசரச் சட்டத்துக்கு, மத்திய அமைச்சகத்தைச் சேர்ந்த பல்வேறு துறை அமைச்சர்களும், குடியரசுத் தலைவரும் ஒரே நாளில் கையெழுத்திட்டுள்ளனர் என்று பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது குறித்து ஓ. பன்னீர்செல்வம் அதிகாரப்பூர்வ அறிவிப்பினை வெளியிட்டார்.
அதில், தமிழகத்தின் உரிமைகளை மீட்டெடுப்பதிலும், தமிழகத்தின் பாரம்பரியத்தைக் கட்டிக் காப்பதிலும், தன்னிகரில்லா தலைவராக விளங்கிய ஜெயலலிதா அவர்கள் ஜல்லிக்கட்டு நடைபெற்றிட முனைந்து மேற்கொண்ட முயற்சிகளே இன்று இந்த அவசரச் சட்டம் பிறப்பிக்கப்படுவதற்கு மூல காரணம் என்பதை இந்த தருணத்தில் நன்றியுடன் நினைவு கூர்கிறேன்.
ஒரே நாளில் அவசர சட்டத்திற்கு மத்திய அரசின் பல்வேறு துறைகளின் ஒப்புதல் மற்றும் இந்திய குடியரசுத் தலைவரின் ஒப்புதல் ஆகியவற்றை பெற்றுத் தர காரணமாக இருந்த பாரதப் பிரதமர் அவர்களுக்கு எனது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழர் பண்பாட்டைக் காத்திட அறவழியில் போராட்டம் நடத்திய மாணாக்கர்கள், இளைஞர்கள் மற்றும் பொது மக்கள் என அனைத்துத் தரப்பினருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.