தமிழக இளைஞர்களின் உத்வேகம்தான் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான அவசரச் சட்டத்தை ஆளுநர் வித்யா சாகர் ராவ் பிறப்பிக்க வழிவகுத்துள்ளதாக பாஜக பிரமுகரும், மாநிலங்களவையின் முன்னாள் உறுப்பினருமான தருண் விஜய் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:-
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு என்பது கலாசாரத்தின் அடையாளம் ஆகும். எனவே அதற்கான தடையை நீக்க வலியுறுத்தி கடந்த சில நாள்களாக போராட்டத்தில் இளைஞர்கள் ஈடுபட்டு வருகின்றனர். விடா முயற்சியுடன் உத்வேகத்துடன் இளைஞர்கள் போராடியதால்தான் அவசரச் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பிரதமர், முதல்வருக்கு நன்றி: ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான அவசரச் சட்டத்தையும் கொண்டு வர முயற்சித்த பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு நன்றி. மேலும், பீட்டா அமைப்புக்கு தடை விதிக்கும் நடவடிக்கையை மத்திய அரசு எடுக்க வேண்டும் என்றார்.