கோவை: கோவையில் ரேக்ளா வண்டி பந்தயத்தை துவங்கி வைக்க வருகை தந்திருந்த அமைச்சர் வேலுமணியை ஜல்லிக்கட்டு போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் எழுச்சி மிகு போராட்டங்களுக்குப் பிறகு தமிழக அரசு ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான அவசர சட்டத்தை நேற்று மாலை பிறப்பித்தது. தற்போது ஜல்லிக்கட்டு மற்றும் மாட்டு வண்டி பந்தயங்கள் நடத்த மாநிலம் முழுவதும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக கோவையில் இன்று ரேக்ளா பந்தயத்தை துவக்கி வைக்க தமிழக அமைச்சர் வேலுமணி வருகை தந்திருந்தார். பந்தயத்தை துவக்கி வைத்து விட்டு மேடையில் இருந்து கீழே இறங்க முயன்ற அவரை ஜல்லிக்கட்டு போராட்டக்காரர்கள் சூழ்ந்து கொண்டு முற்றுகையிட்டனர்.
உடனே பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீஸ்காரர்கள் அவருக்கு பாதுகாப்பாக போராட்டக்காரர்களை விலக்கி விட்டனர். அப்போது அங்கே சிறிய அளவிலான கைகலப்பு காட்சிகள் அரங்கேறின.
இதனால் அங்கு சிறிது நேரம் பதட்டம் நிலவியது.