புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே இன்று காலை நடந்த ஜல்லிக்கட்டுப் போட்டி போட்டியில் காளைகள் முட்டி இருவர் பலியாக்கினார். மேலும் 55 பேர் காயம் அடைந்தனர்.
ஜல்லிக்கட்டு நடைபெறுவதற்கு என அவசர சட்டம் ஒன்றை தமிழக அரசு நேற்று வெளியிட்டது. அதன் காரணமாக புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ராப்பூசலில் இன்று காலை ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இந்த போட்டியை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.
போட்டி நடைபெறுவதை முன்னிட்டு வாடிவாசல் சீரமைப்பு மற்றும் போட்டி நடைபெறும் பகுதியை சுற்றி தடுப்பு கட்டைகள் மற்றும் பாதுகாப்புக்கு என தனியாக பேரி கார்டுகள் அமைக்கப்பட்டிருந்தது.
இன்று காலை போட்டி தொடங்கியதும் சுமார் 50-க்கும் மேற்பட்ட காளைகள் வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்டன. இதில் 100-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்று காளைகளை அடக்கினர். போட்டியை காண ஏராளமான பொது மக்களும் அங்கே திரண்திருந்தனர்.
இந்த போட்டியில் எதிர்பாராதவிதமாக காளைகள் முட்டியதில் ராஜா மற்றும் மோகன் ஆகிய இரு மாடுபிடி வீரர்கள் உயிரிழந்தனர். மேலும் 55 பேர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சைகள் வழங்கபடுகின்றன.
இதனிடையே ஜல்லிக் கட்டுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று கோரி அப்பகுதி இளைஞர்களில் ஒரு பகுதியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல் நேற்று ஜல்லிக்கட்டுக்கான முன்னேற்பாடுகள் நடைபெற்ற போது சிலர் அதனை தடுத்து நிறுத்தினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.