ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு அவசரச் சட்டம் கொண்டு வந்துள்ள நிலையில், இது நிரந்தரத் தீர்வல்ல எனக் கூறி தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தங்களது போராட்டத்தைக் கைவிட மறுத்துள்ளனர்.
ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் கடந்த திங்கள்கிழமை தொடங்கிய போராட்டம் தமிழகம் முழுவதும் தீயாகப் பரவியது. சென்னை மெரீனா கடற்கரை, மதுரை தமுக்கம் மைதானம், கோவை, திருச்சி, சேலம், கடலூர் என தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இளைஞர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் எழுச்சியுடன் பங்கேற்று வருகின்றனர்.
இந்நிலையில், முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் புதுதில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்க வலியுறுத்தினார். மேலும், தில்லியில் முகாமிட்ட முதல்வர் பன்னீர்செல்வம், ஜல்லிக்கட்டுக்கு அவசரச் சட்டம் பிறப்பிக்க சட்டப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
இதன் தொடர்ச்சியாக ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான தமிழக அரசின் அவசரச் சட்டத்துக்கு தமிழக ஆளுநர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவ் சனிக்கிழமை ஒப்புதல் அளித்தார்.
இதைத் தொடர்ந்து அலங்காநல்லூரில் ஞாயிற்றுக்கிழமை ஜல்லிக்கட்டு நடத்தவும், அதை தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தொடங்கி வைப்பதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. ஆனால், அவசரச் சட்டத்தை ஏற்க முடியாது.
ஜல்லிக்கட்டுக்கு தடை இல்லாத நிரந்தரச் சட்டம் கொண்டுவர வேண்டும். அதுவரை போராட்டம் தொடரும் என அலங்காநல்லூர், சென்னை மெரீனா உள்பட பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் அறிவித்துள்ளனர்.