சென்னை: வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக கடலோர தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னையில் உள்ள வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னையில் உள்ள வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
சில தினங்களுக்கு முன்பு தாய்லாந்து அருகே காற்றழுத்த தாழ்வுநிலை ஒன்று உருவானது. அது படிப்படியாக நகர்ந்து, தற்போது தென்மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டு வருகிறது. இதனால் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மிதமான மழை பெய்யும்.
குறிப்பாக சொல்வதென்றால் நாகப்பட்டினம், திருவாரூர், ராமநாதபுரம் ஆகிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவும் வாய்ப்புள்ளது. உள் தமிழகத்தில் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையை பொருத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத் துடன் காணப்படும். ஒருசில இடங்களில் லேசான மழை பெய்யக் கூடும். அதிகபட்ச வெப்பநிலை யாக 30 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்சமாக 25 டிகிரி செல்சியஸ் இருக்கும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.