தமிழகத்தில் இனி ஒரு விவசாயிகூட தற்கொலை செய்து கொள்ளக் கூடாது; விவசாயிகளை மீட்டெடுக்க மாணவர்கள் ஒன்றிணைய வேண்டும் என்றார் திரைப்பட இயக்குநர் சமுத்திரக்கனி.
நாமக்கல் பூங்கா சாலையில் ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்கக் கோரி, கடந்த 18-ஆம் தேதி தொடங்கிய அறவழிப் போராட்டம் 4-ஆம் நாளாக சனிக்கிழமையும் நீடித்தது. போராட்டத்தில், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள், ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் என 5,000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
போராட்டத்தில் கலந்துகொண்ட மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்க வேண்டும். பீட்டா அமைப்பைத் தடை செய்ய வேண்டும் என முழக்கம் எழுப்பினர்.
இந்த நிலையில் திரைப்பட நடிகரும், இயக்குநருமான சமுத்திரக்கனி போராட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு ஆதரவு தெரிவித்துப் பேசியது:
இந்தக் கூட்டம் இதோடு நின்று விடாது, முதல் போராட்டமாக வீரமிக்க ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதற்கு நடத்தப்பட்டுள்ளது. அடுத்து விவசாயிகளை மீட்டெடுக்க மாணவர்கள் ஒன்றிணைய வேண்டும். இனி ஒரு விவசாயிகூட தற்கொலை செய்து கொள்ளக் கூடாது. இலவசங்களைப் புறக்கணிக்க வேண்டும். கல்வியை வழங்கப் போராட வேண்டும்.
வெளிநாட்டு நிறுவனம் ஒன்று நமது தேசியக் கொடியை கால் மிதியில் பதித்து விற்பனை செய்கிறது.
அதற்கு சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கின்றனர். ஆனால், பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்கப் போராடும் மாணவர்கள் மீது தடியடி நடத்துகின்றனர். நமது பாட்டன், முப்பாட்டன் விட்டுப்போன பாரம்பரியத்தைத் தொலைத்து விட்டோம். தொலைந்துபோன நம் பண்பாட்டை, கலாசாரத்தை நாம் தோண்டி எடுப்போம் என்றார்.