நீர் ஆதார மேலாண்மையை மேற்கொள்ள குடிமராமத்து திட்டத்தை தமிழக அரசு விரைவில் தொடங்க உள்ளதாக ஆளுநர் உரையில் கூறப்பட்டுள்ளது.
ஆளுநர் உரையில் கூறியிருப்பது:- நீர் ஆதாரங்களை முறையாகவும், சிறப்பாகவும் பராமரித்து பயன்படுத்திட தமிழக அரசு பெரும் முக்கியத்துவம் அளித்து வருகிறது. பொது மக்களின் பங்களிப்புடன் நீர் ஆதார மேலாண்மையை மேற்கொள்ள குடிமராமத்து திட்டத்தை அரசு விரைவில் தொடங்க உள்ளது. இதற்கான நிதி ஒதுக்கீடுகள் வரும் ஆண்டுகளில் படிப்படியாக உயர்த்தப்படும். நீர்வள, நிலவளத் திட்டத்தின் இரண்டாவது கட்டத் திட்டப் பணிகளை உலக வங்கியின் நிதியுதவியுடன் அரசு விரைவில் செயல்படுத்தும்.
மேலும், காவிரிப் பாசனப் பகுதியிலுள்ள வெண்ணாறு உபவடிநிலப் பகுதியில், பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைப்பதற்காக ஆசிய வளர்ச்சி வங்கியின் நிதி உதவியுடன் பருவநிலை மாற்றத் தழுவல் திட்டத்தை அரசு செயல்படுத்தி வருவதால் பருவநிலை மாற்றத்தால் எளிதில் பாதிப்புக்குள்ளாகக்கூடிய காவிரி பாசனப் பகுதிகளின் இயற்கைச் சூழல் பாதுகாக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.