தமிழக ஆளுநரின் உரையில் வளர்ச்சிக்கான திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படாமல் ஏமாற்றமளிக்கிறது என்று பாமக நிறுவனர் ராமதாஸ், தமாகா தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
ராமதாஸ்: சட்டப் பேரவையில் ஆளுநர் உரையில் தமிழகத்தின் வளர்ச்சிக்கான திட்டங்கள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மக்களுக்கு பயனுள்ள அறிவிப்புகள் இல்லாதது ஏமாற்றமளிக்கிறது. வறட்சிக்காக பயிர்க்கடன் தள்ளுபடி, சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்குதல், விவசாயிகளுக்கு இழப்பீடு ஆகியவை எப்போது வழங்கப்படும் என்பது குறித்த அறிவிப்புகள் ஆளுநர் உரையில் இடம் பெறவில்லை.
நதிநீர் பிரச்னைகள், மீனவர்கள் பிரச்னை குறித்து மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும் என்பன போன்ற கோரிக்கைகள்தான் இடம்பெற்றுள்ளன. இதுதவிர, தீர்வுகள் எதுவும் இடம் பெறவில்லை.
ஜி.கே.வாசன்: விவசாயிகளுக்கான பயிர்க்கடன் தள்ளுபடி, உயிரிழந்த 200-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கான இழப்பீடு, வர்தா புயல் நிவாரணம் போன்றவை குறித்து ஆளுநர் உரையில் அறிவிப்புகள் இடம்பெறும் எதிர்பார்க்கப்பட்டது. அதற்கு மாறாக, எவ்விதமான அறிவிப்புகள் இல்லாமல் இருப்பது மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது.