தமிழகத்தில் ஜல்லிக்கட்டை நடத்தியுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது என்று ஆளுநர் வித்யாசாகர் ராவ் தனது உரையில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, சட்டப் பேரவையில் திங்கள்கிழமை அவர் ஆற்றிய உரை:
ஜல்லிக்கட்டை நடத்துவதற்கு உள்ள சட்டரீதியான தடைகளை நீக்குவதற்கு தமிழக அரசு தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டது. ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக் கோரி வரலாறு காணாத வகையில் லட்சக்கணக்கான இளைஞர்களும், அவர்களுக்கு ஆதரவாகத் திரண்ட பொது மக்களும் தன்னெழுச்சியுடன் அமைதியான முறையிலும், முழு கட்டுப்பாட்டுடனும் தங்களின் உணர்வுகளை வெளிப்படுத்தினர்.
இதன் விளைவாக ஜல்லிக்கட்டை நடத்துவதற்கும், தமிழர்களின் கலாசார அடையாளங்களைப் பாதுகாப்பதற்கும், உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்களிடையே பேராதரவு ஏற்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தில் தமிழகத்துக்கு உள்பட்ட பகுதிகளில் செயல்படுத்தும் வகையில், குறிப்பிட்ட பிரிவுகளில் அவசரச் சட்டத்தின் மூலம் மாநில அரசு சில சட்டத் திருத்தங்களைக் கொண்டு வந்து ஜல்லிக்கட்டை நடத்துவதற்கு வழிவகை செய்துள்ளது.
இந்த முயற்சிகளில் வெற்றி கண்டு ஜல்லிக்கட்டை நடத்தியுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்கு ஒரு நிரந்தரத் தீர்வாக, இந்த அவரசச் சட்டத்தை மாற்றீடு செய்ய, முறையான சட்ட முன்வடிவு உடனடியாகக் கொண்டு வரப்படும் என்று தெரிவித்துள்ளார்.