மதுரையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் நூற்றாண்டு தொடக்க விழாவையொட்டி, புகைப்பட கண்காட்சியை முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி திறந்து வைத்தார்.
விழாவில் பங்கேற்க முதல்வர் விமானம் மூலம் வெள்ளிக்கிழமை காலை மதுரை வந்தார். விமான நிலையத்தில் அமைச்சர்கள் செல்லூர் கே. ராஜூ, ஆர்.பி. உதயகுமார், விஜயபாஸ்கர், மாவட்ட ஆட்சியர் கொ. வீரராகவ ராவ், எம்.எல்.ஏ.க்கள் வி.வி. ராஜன் செல்லப்பா, போஸ் மற்றும் புறநகர் மாவட்ட நிர்வாகிகள் வரவேற்றனர். அங்கிருந்து புறப்பட்ட முதல்வரை விமான நிலைய சாலையில் புனித அண்ணாள் பள்ளி மாணவிகள் வரவேற்றனர்.
நூற்றாண்டு தொடக்க விழா நடைபெற்ற அம்மா திடலுக்கு முதல்வர் சென்றார். அங்கு கலைஞர்கள் புலியாட்டம் ஆடியும், பெண்கள் முளைப்பாரி, பால்குடங்களுடனும் மேள தாளங்களுடனும் வரவேற்றனர். மதுரை மீனாட்சியம்மன் கோயில், திருப்பரங்குன்றம் சுப்ரமணியசாமி கோயில், பழமுதிர்ச்சோலை முருகன் கோயில், கூடழகர் பெருமாள் கோயில், நரசிங்கம் யோக நரசிம்மர் கோயில், திருமோகூர் காளமேகப் பெருமாள் கோயில்களில் சிறப்புப் பூஜை நடத்தப்பட்டு கொண்டுவரப்பட்ட பிரசாதம் மாலை மரியாதையும் முதல்வரிடம் வழங்கப்பட்டன.
மைதானத்தில் செய்தி-மக்கள் தொடர்புத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த எம்ஜிஆர் நூற்றாண்டு விழா புகைப்பட கண்காட்சியை முதல்வர் திறந்து வைத்து பார்வையிட்டார்.
கண்காட்சியில் முதல் முறையாக எம்ஜிஆர் முதல்வராக பதவியேற்றபோது எடுத்தப்படம், அண்ணா, பெரியார், முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆகியோருடன் எம்ஜிஆர் இருக்கும் படம், இலங்கை தமிழர்களுக்காக உண்ணாவிரதம் மேற்கொண்டது, சத்துணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தி மாணவர்களுடன் உணவு உண்பது, நரிக்குறவர் சமூக மக்களுடன் சமமாக அமர்ந்து உணவு உண்பது, போப் ஆண்டவருடன் எம்ஜிஆர் சந்திப்பு, ஏழை மக்களுக்கு நலத்திட்டங்கள் வழங்குவதி உள்ளிட்ட படங்கள் கண்காட்சியில் இருந்தன.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் படங்களும் இடம்பெற்று இருந்தன.