சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனை விவகாரத்தில் தனக்கு சம்மன் அனுப்பப்பட்டதற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் தொடுத்த வழக்கை எதிர்த்து, அமலாக்கத் துறை தாக்கல் செய்த மனுவை அவசரமாக விசாரிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
சட்ட விரோதப் பணப் பரிவர்த்தனை தொடர்பாக கார்த்தி சிதம்பரத்துக்கு அமலாக்கத் துறை அண்மையில் சம்மன் அனுப்பியது. இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர் வழக்குத் தொடுத்துள்ளார்.
இதனிடையே, இந்த வழக்கை விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றத்துக்கு உள்ள அதிகார வரம்பு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அமலாக்கத் துறை மனு தாக்கல் செய்துள்ளது.
இது தொடர்பாக உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஜே.எஸ். கேஹர், நீதிபதி சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் அமலாக்கத் துறை வழக்குரைஞர் ஆனந்த் குரோவர் செவ்வாய்க்கிழமை ஆஜராகி, 'கார்த்தி சிதம்பரத்துக்கு அனுப்பப்பட்ட சம்மனுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றத்துக்கு அதிகார வரம்பு உள்ளதா? இல்லையா? என்பது தொடர்பாக அமலாக்கத் துறை தாக்கல் செய்த மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டும்' எனக் கேட்டுக் கொண்டார். ஆனால், இந்த கோரிக்கையை நீதிபதிகள் ஏற்க மறுத்துவிட்டனர்.