நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் செளந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் அவரது கணவர் அஸ்வின் ராம்குமார் ஆகிய இருவருக்கும் பரஸ்பரம் விவாகரத்து வழங்கி சென்னை குடும்பநல நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகளான செளந்தர்யாவுக்கும், சென்னை சேர்ந்த தொழிலதிபர் அஸ்வின் ராம்குமாருக்கும் கடந்த 2010 - ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு கடந்தாண்டு 'வேத்' என்ற ஆண் குழந்தை பிறந்தது. இதைத்தொடர்ந்து, திரைப்பட தயாரிப்பில் சௌந்தர்யா ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில், அஸ்வின்- சௌந்தர்யா இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
இந்த நிலையில், கடந்தாண்டு டிசம்பர் 23 - ஆம் தேதி, இருவரும் பரஸ்பரம் பிரிவதென முடிவெடுத்து, விவாகரத்து கோரி சென்னை முதன்மை குடும்பநல நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி மனுத்தாக்கல் செய்தனர். ஆறு மாத காலம் முடிந்ததையடுத்து, முதன்மை குடும்ப நல நீதிமன்ற நீதிபதி மரியா கிளேட் முன்பு இருவரும் கடந்த மாதம் நேரில் ஆஜராகினர். அப்போது, இருதரப்பும் தங்களது நிலையில் உறுதியாக இருந்ததையடுத்து , இந்த வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த நிலையில், இவ்வழக்கில், செவ்வாய்க்கிழமை (ஜூலை 4) தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், இருவருக்கும் கடந்த 2010 - ஆம் ஆண்டு செப்டம்பர் 3 - ஆம் தேதி நடைபெற்ற திருமணம், அதற்கு பின்னர் நடைபெற்ற பதிவு ஆகியவற்றை ரத்து செய்ததுடன், இருவருக்கும் விவாகரத்து வழங்கி நீதிபதி தீர்ப்பளித்தார்.