ஜிஎஸ்டி அமல் எதிரொலி: மருந்துகள் தட்டுப்பாட்டைச் சமாளிக்க ஏற்பாடு

சரக்கு சேவை வரி விதிப்பால் (ஜிஎஸ்டி) ஏற்பட்டுள்ள மருந்துகள் தட்டுப்பாட்டைச் சமாளிக்க தமிழக அரசின் மருந்துகள் கட்டுப்பாட்டு இயக்ககம் உரிய நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

சரக்கு சேவை வரி விதிப்பால் (ஜிஎஸ்டி) ஏற்பட்டுள்ள மருந்துகள் தட்டுப்பாட்டைச் சமாளிக்க தமிழக அரசின் மருந்துகள் கட்டுப்பாட்டு இயக்ககம் உரிய நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
நாடு முழுவதும் ஜிஎஸ்டி அமலில் உள்ளதால் பல்வேறு துறைகள் பாதிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் மருந்துகள் தயாரிப்பு மற்றும் விற்பனையில் ஈடுபட்டுள்ள வணிகர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக மருந்துகளின் இருப்பும் குறைந்துள்ளது.
ஜிஎஸ்டி விரி விதிப்புக்குப் பின்னர் என்னென்ன மருந்துகளுக்கு எத்தனை சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது என்ற புதிய விலைப்பட்டியலை மருந்து தயாரிப்பாளர்களும், மருந்து விநியோகஸ்தர்களும் தயாரிக்க வேண்டும். அதன்பின்னர் புதிய விலையின் அடிப்படையில் மருந்துகளை விற்பனைக்கு அனுப்ப வேண்டும். இந்த நடைமுறைகளுக்கு ஒரு சில வாரங்கள் தாமதம் ஏற்படும் என்று கூறப்படுகிறது.
இருப்பு இல்லை: புதிய விலை நிர்ணயம் செய்யப்பட்ட மருந்துகளைத் தான் விற்பனை செய்ய வேண்டும் என்பதால் பல மருந்து வணிகர்கள் கையிருப்பிலுள்ள மருந்துகளின் அளவைக் குறைத்துவிட்டனர். இதன் காரணமாக நோய் எதிர்ப்பு மருந்துகள், அடிப்படை மருந்துகள் உள்ளிட்டவற்றுக்கு கடும் தட்டுப்பாட்டு நிலவுகிறது. மொத்த விற்பனை மருந்து வணிகர்கள் ஓரளவு இருப்பு வைத்துள்ள நிலையில், சில்லறை விற்பனையாளர்களிடமே அதிக மருந்து தட்டுப்பாடு நிலவுகிறது.
ரூ.2 ஆயிரம் கோடி இழப்பு: ஜிஎஸ்டி வரி விதிப்பின் மூலம் நாடு முழுவதும் மருந்து வணிகர்களுக்கு ரூ.2 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. மருந்து விற்பனையில் தமிழகம் முன்னிலையில் உள்ளதால், இதில் 15 முதல் 20 சதவீத பாதிப்பு தமிழகத்துக்கு ஏற்பட்டிருக்கும். அந்த வகையில் தமிழகத்தில் மருந்து வணிகர்களுக்கு ரூ.400 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது என்று மருந்து வணிகர்கள் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்கத்தின் நிர்வாகச் செயலாளர் ஆனந்தன் கூறியது: புதிய வரிவிதிப்பின்படி, பெரும்பாலான மருந்துகளுக்கு 5 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக வரி உயர்த்தப்பட்டுள்ளது. அதேவேளையில், பொதுமக்கள் பழைய மருந்துகளை முந்தைய விலையிலேயே வாங்கலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆனால், மருந்து கடைகாரர்கள் விற்பனை செய்யும் மருந்துகளுக்கு 12 சதவீத வரி விதிக்கப்பகிறது. இதனால் மருந்துகளை இருப்பு வைத்துள்ள விற்பனையாளர்களுக்கு சுமார் 7 சதவீதம் வரை நஷ்டம் ஏற்படுகிறது. இதன் காரணமாக மருந்து வணிகர்கள் இருப்பு வைப்பதைக் குறைத்துவிட்டதால் தட்டுப்பாடு நிலவுகிறது. இருப்பிலுள்ள மருந்துகளை பழைய விலைக்கே விற்பனை செய்வதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் கோரிக்கை அளித்துள்ளோம் என்றார்.
தட்டுப்பாட்டைச் சமாளிக்க ஏற்பாடு: இந்நிலையில் மருந்துகள் தட்டுப்பாட்டைப் போக்குவதற்கு அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக மருந்துகள் கட்டுப்பாட்டு இயக்குநர் (பொறுப்பு) சிவபாலன் கூறுகையில், பொதுமக்கள் யாருக்காவது மருந்துகள் தேவைப்பட்டால் 044 -  2432 1830, 2433 5201, 2433506 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். மேலும் இயக்ககத்தின் http://www.drugscontrol.tn.gov.in  என்ற இணையதளத்தில் அனைத்து மாவட்டங்களில் உள்ள மருந்துகள் கட்டுப்பாட்டு உதவி இயக்குநர்களின் தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அந்தந்த மாவட்டங்களைச் சேர்ந்தோர் அந்த மாவட்ட உதவி இயக்குநரைத் தொடர்பு கொண்டு என்ன மருந்து தேவைப்படுகிறது என்று தெரிவித்தால், உடனடியாக ஏற்பாடு செய்து கொடுக்கப்படும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com