பொறியியல் படிப்புகளுக்கான (பி.இ.) கல்விக் கட்டணத்தை உயர்த்த அரசு பரிசீலித்து வருவதாக உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்தார்.
சட்டப் பேரவையில் வியாழக்கிழமை கேள்வி நேரத்தின் போது திமுக உறுப்பினர் ப.ரங்கநாதன் (வில்லிவாக்கம்) துணைக் கேள்வி எழுப்பினார். அப்போது, பொறியியல் கல்லூரிகளுக்கான கல்விக் கட்டணத்தை உயர்த்தப் போவதாக தகவல்கள் வருகின்றன. அதுகுறித்து அரசு பதிலளிக்க வேண்டும் என்றார்.
இதற்கு அமைச்சர் அன்பழகன் அளித்த பதில்: அரசு, தனியார் உள்பட பொறியியல் கல்லூரிகளில் ஒப்புதல் அளிக்கப்பட்ட இடங்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 77 ஆயிரத்து 61. அதில், கடந்த ஆண்டு ஒரு லட்சத்து 50 ஆயிரத்து 99 மாணவர்கள் மட்டுமே சேர்ந்தனர். 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை கல்விக் கட்டணத்தை மாற்ற வேண்டும். ஆனால், 2012-13-ஆம் ஆண்டுக்குப் பிறகு 5 ஆண்டுகளாக கட்டணங்கள் மாற்றப்படவில்லை.
இந்தக் கட்டணங்களை மாற்ற வேண்டுமென தனியார் பொறியியல் கல்லூரி சங்கத்தினர் வலியுறுத்தினர். இதனிடையே, கவுன்சிலிங் மூலமாகச் சேருவோருக்கு ரூ.40 ஆயிரத்தில் இருந்து ரூ.50 ஆயிரமாகவும், கவுன்சிலிங் இல்லாமல் சேருவோருக்கு ரூ.70 ஆயிரத்தில் இருந்து ரூ.80 ஆயிரமாகவும் உயர்த்த அரசுக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இது அரசின் பரிசீலனையில் உள்ளது. உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.