‘ஊழலில் மிதக்கும் தமிழகத்தை தூய்மைப்படுத்த வா!’ என்று நடிகர் கமல் ஹாசனை புதுக்கோட்டை ரசிகர்கள் அரசியலுக்கு அழைத்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்ட கமல் நற்பணி மன்றத்தை சேர்ந்த ரசிகர்கள் கமலை அரசியலில் குதிக்கும்படி அழைப்புவிடுத்துள்ளனர். மாவட்டம் முழுவதும் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள், பேனர்களைத் தாண்டி சமூக வலைத்தளத்திலும் இந்த போஸ்டர் டிரெண்டிங்கில் உள்ளது.
'நடிகர் சங்கத்தை, தயாரிப்பாளர் சங்கத்தையும் தூய்மை படுத்தினாய், எப்பொழுது தலைவா... ஊழலில் மிதக்கும் தமிழகத்தை தூய்மைப் படுத்துவாய்? மனது வை தலைவா... தூய்மை நாயகனே... விரைவில் உங்கள் சேவையை எதிர்நோக்கும் தமிழ்மக்கள்...
ஜூலை 9-ல் நன்னிலத்திற்கு வருகை தரும் எங்கள் உலக நாயகனே வருக! வருக!!'
கடந்த சில காலமாக தமிழக அரசியல் பற்றியும் சமூக பிரச்னைகள் பற்றியும் தனது கருத்துகளையும் விமர்சனங்களையும் தொடர்ச்சியாக முன்வைத்து வருகிறார் கமல். நடிகர் ரஜினி அரசியலுக்கு வருவதே இன்னும் உறுதியாகாத நிலையில் தற்போது நடிகர் கமலையும் ரசிகர்கள் அரசியலுக்கு அழைத்திருப்பது மேலும் பல திருப்பங்களை ஏற்படுத்துமா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.