தமிழகத்தில் ஆட்சியைக் கலைக்க மாட்டோம் என்று மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு கூறினார்.
சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜி.எஸ்.டி. கருத்தரங்கில் கலந்து கொண்ட பின் புதுதில்லி புறப்படும் போது விமான நிலையத்தில் அமைச்சர் வெங்கய்ய நாயுடு அளித்த பேட்டி :
குடியரசுத் தலைவர் தேர்தலுக்குப் பிறகு தமிழகத்தில் ஆட்சி கலைக்கப்படும் என்று விஷமப் பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது. இதில் சிறிதும் உண்மையில்லை. இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 356}ஐ மத்திய அரசு ஒருபோதும் பயன்படுத்தாது.
தமிழகத்தில் இயங்கி வரும் அரசு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டது. மக்களால் பெரும்பான்மை பெற்ற கட்சிதான் ஆட்சி அமைக்க வேண்டும். யார் முதல்வராக வேண்டும் என்பது குறித்து அந்தக் கட்சியின் சட்டப் பேரவை உறுப்பினர்கள்தான் முடிவு செய்ய வேண்டும். தமிழகத்தில் உள்ள ஆட்சியை மத்திய அரசு ஒருபோதும் கலைக்காது.
புதுச்சேரி துணை நிலை ஆளுநர், முதல்வர் இடையிலான பிரச்னையை அவர்கள் தான் பேசித் தீர்க்க வேண்டும். குடியரசுத் தலைவர் தேர்தலில் ராம்நாத் கோவிந்த் வெற்றி பெறுவார்.