சுவாதி கொலை வழக்கு என்ற பெயரில் திரைப்படம் எடுக்கும் இயக்குநர், தயாரிப்பாளர், கதாசிரியர் ஆகியோரின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் சுவாதி, கடந்த ஆண்டு ரயில் நிலையத்தில் படுகொலை செய்யப்பட்டார்.
இந்தச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, சுவாதி கொலை வழக்கு என்ற பெயரில் திரைப்படம் எடுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
அதுதொடர்பான முதல் காட்சியும் வெளியானது. இந்த நிலையில், இந்தப் படத்துக்கு தடை கோரி, சுவாதியின் தந்தை சந்தான கோபால கிருஷ்ணன் சென்னை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் பட இயக்குனர் ரமேஷ் செல்வம், தயாரிப்பாளர் சுப்பையா, கதாசிரியர் ரவி ஆகியோருக்கு எதிராக மத்திய குற்றப் பிரிவு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் காவல் துறையினர் தங்களைக் கைது செய்யகூடும் எனக் கூறி, மூவரும் முன் ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.என்.பிரகாஷ், 'படத்தின் கதாபாத்திரங்களுக்கு உண்மையானவர்களின் பெயரையே சூட்டியுள்ளனர். உண்மைக் கதை என்று விளம்பரமும் செய்யப்பட்டுள்ளது.
அப்படி இருக்கும்போது சம்பந்தப்பட்டவர்களிடம் அனுமதி பெறாமல் இதுபோன்று எப்படி படம் எடுக்க முடியும்' எனக் கேள்வி எழுப்பிய நீதிபதி, மூவரின் முன்ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.