மணிப்பூரைச் சேர்ந்த போராளி இரோம் சர்மிளா தனது காதலரை திருமணம் செய்வதற்கு விருப்பம் தெரிவித்து, கொடைக்கானல் சார்- பதிவாளர் அலுவலகத்தில் புதன்கிழமை விண்ணப்பம் அளித்தார்.
மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்தவர் இரோம் சர்மிளா (45). அந்த மாநிலத்தில் நடைபெறும் ராணுவ அடக்குமுறையை கண்டித்து, 16 ஆண்டு காலமாக காலவறையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டிருந்தார். அவர் கடந்தாண்டு தனது உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார்.
இந்நிலையில், கடந்த ஒரு மாதமாக கொடைக்கானல் பேத்துப்பாறை பகுதியில் இரோம் சர்மிளா தனது நீண்டகால காதலரான லண்டனைச் சேர்ந்த தேஸ்மந்த் கொட்டிக்னிகோ (55) உடன் தங்கியுள்ளார். இருவரும் கடந்த ஒரு மாதமாக கொடைக்கானல் பகுதிகளிலுள்ள பல்வேறு இடங்களையும் சுற்றி பார்த்து, அங்குள்ள மலைவாழ் மக்களிடம் பழகி வந்தனர்.
இந்நிலையில், இரோம் சர்மிளா தனது காதலரை திருமணம் செய்து கொள்ளவதற்காக விண்ணப்பம் அளிக்க கொடைக்கானல் சார்- பதிவாளர்அலுவலகத்திற்கு புதன்கிழமை தனது வழக்குரைஞர்களுடன் வந்தார். அங்கு திருமண விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சார்- பதிவாளர் ராஜேஷிடம் இருவரும் வழங்கினர்.
விண்ணப்பத்தை பெற்றுக் கொண்ட சார்- பதிவாளர் ராஜேஷ், இந்திய தனி திருமண சட்டத்தின்படி, அவர்களது திருமணத்தை உடனடியாக பதிவு செய்ய முடியாது. விண்ணப்பம் சார்- பதிவாளர் அலுவலகத்தில் ஒட்டப்பட்டிருக்கும் 30- நாட்களுக்குள் இத்திருமணம் குறித்து எந்தவிதமான எதிர்ப்பு இல்லாமல் இருந்தால், இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என தெரிவித்தார்.
பின்னர் இரோம் சர்மிளா செய்தியாளர்களிடம் கூறியதாவது:
அமைதி தேடி கொடைக்கானலுக்கு வந்தேன், இங்குள்ள இயற்கை சூழல் மிகவும் பிடித்துள்ளது. இங்குள்ள மக்களும் பிரியமுடன் பழகுகின்றனர். மணிப்பூரில் கடந்த 16 ஆண்டுகளாக துப்பாக்கி கலாசாரத்தை எதிர்த்து போராடி வந்தேன். நான் எனது போராட்டத்தில் தோல்வியை தழுவினாலும் சோர்ந்து போய்விடவில்லை.
மணிப்பூரில் நடைபெறும் அடக்குமுறையை எதிர்த்து புதிய வழியில் போராட உள்ளேன்.
வரும் செப்டம்பர் மாதம் 17- ம் தேதி புவனேசுவரத்தில் ஐ.நா.வால் நடத்தப்பட உள்ள தெற்காசிய முதல் இளைஞர்கள் மாநாட்டில் கலந்து கொள்கிறேன்.
இந்திய தனி திருமண சட்டத்தின்படி 30- நாட்களுக்கு பிறகு எனது காதலரை திருமணம் செய்து கொள்வேன் என்றார்.