இரட்டை இலை சின்னத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் (ஏப்ரல் 25) இரவு டி.டி.வி.தினகரனை தில்லி போலீஸார் கைது செய்தனர்.
சசிகலா தலைமையிலான அதிமுகவுக்கு சாதகமாக 'இரட்டை இலை' சின்னம் பெற தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக, சுகேஷ் சந்திரசேகர் என்பவர் கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து நடைபெற்ற விசாரணையில் அதிமுக அம்மா அணிக்கு இரட்டை இலை சின்னம் பெற தினகரன் தன்னிடம் பணம் கொடுத்ததாக வாக்குமூலம் அளித்தார். இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த தில்லி போலீஸார் தினரனிடம் நேரில் ஆஜராகும் படி சம்மன் அளித்தனர்.
சம்மன் பெற்ற தினகரன், சுமார் 37 மணி நேரம் தில்லி போலீஸார் முன்பு ஆஜராகி விளக்கம் அளித்தார். மேலும், தினகரனின் உதவியாளர் மற்றும் நண்பர் மல்லிகார்ஜுனனிடமும் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.
தினகரனின் பதில் திருப்தி அளிக்காத நிலையில் தில்லி போலீஸார் தினகரனை கைது செய்துள்ளனர்.
இந்த வழக்கில் சுகேஷுடன் சேர்த்து டி.டி.வி.தினகரன் மற்றும் அவரது நண்பர் மல்லிகார்ஜுனா, ஹவாலா இடைத்தரகர்கள் என சந்தேகிக்கப்படும் நரேஷ், லலித் குமார் ஆகியோர் மீது காவல்துறை குற்றம்சாட்டியுள்ளது.
இதில் சுகேஷ் நீங்கலாக மற்ற அனைவரையும் தில்லி தீஸ் ஹசாரி நீதிமன்றம் அண்மையில் ஜாமீனில் விடுவித்தது.
சின்னத்திற்காக லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கின் குற்றப்பத்திரிகையில் தினகரன் பெயர் இல்லை எனவும் போதிய ஆதாரம் இல்லாததால் தினகரன் பெயர் சேர்க்கப்படவில்லை என்று தில்லி போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், சின்னத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கின் குற்றப்பத்திரிகையில் போதிய ஆதாரங்கள் இல்லாததால் டி.டி.வி. தினகரன் பெயர் இடம்பெறவில்லை. ஆனால் சுகேஷ் சந்திரசேகர் பெயர் இடம்பெற்றுள்ளதாக தில்லி போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, இந்த வழக்கில் இருந்து டி.டி.வி. தினகரன் விரைவில் விடுதலை செய்யப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.