அனைத்து விவசாயிகளின் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டுமென்ற எதிர்க்கட்சிகளின் கேள்விக்கு கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பதிலளித்தார்.
தமிழகத்தில் அனைத்து விவசாயிகளின் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டுமென சட்டப் பேரவையில் உறுப்பினர்கள் டி.ஆர்.பி.ராஜா (திமுக), விஜயதரணி (காங்கிரஸ்) ஆகியோர் கோரிக்கை விடுத்தனர். இதற்கு கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ அளித்த பதில்: கடந்த 2011 முதல் 2016 வரையிலான ஆட்சிகாலத்தில் புயல்நிவாரணம், வறட்சி நிவாரணம், வெள்ள நிவாரணம் என 43 லட்சத்து 40 ஆயிரத்து 150 விவசாயிகளுக்கு ரூ.7163.81 கோடி அளவுக்கு நிவாரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. மீண்டும் அதிமுக ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் 12 லட்சத்து 2 ஆயிரத்து 75 விவசாயிகளுக்கு ரூ.5318.73 கோடி அளவிற்கு சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
பயிர்க் கடன் தள்ளுபடிக்கு பின்னர், கடந்த ஆண்டு குறுவை தொகுப்புத் திட்டம், சம்பா தொகுப்புத் திட்டம், குறுகிய கால பயிர்க்கடனை மத்திய காலக் கடனாகமாற்றியது, இடுபொருள் மானியம், பயிர்க் காப்பீட்டு இழப்பீட்டுத் தொகை என மொத்தம் 44 லட்சத்து 87 ஆயிரத்து 812 விவசாயிகளுக்கு ரூ.7,670.06 கோடி அளவுக்குச் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.
நீதிமன்றத்தில் வழக்கு: விவசாயிகள் கடன் தள்ளுபடி தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. எனவே, அதைப் பற்றி விவாதிப்பது உகந்ததல்ல. இவ்வழக்கு வரும் செப்டம்பர் 4-இல் விசாரணைக்கு வர உள்ளது. இந்த வழக்கில் வழங்கப்படும் இறுதித் தீர்ப்பின் அடிப்படையில் ஆய்வு செய்யப்படும் என்றார் செல்லூர் கே.ராஜூ.