எல்லை தாண்டியதாக கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் தமிழக மீனவர்கள் 10 பேருக்கு, அந்நாட்டு நீதிமன்றம் ஜூலை 27 ஆம் தேதி வரை காவலை நீட்டித்து வெள்ளிக்கிழமை உத்தரவு பிறப்பித்துள்ளது.
ராமேசுவரம் தீவு பாம்பன் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் 5 பேர், கடந்த 1.5.2017 ஆம் தேதி கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டியதாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களிடம் வெள்ளிக்கிழமை விசாரணை மேற்கொண்ட அந்நாட்டு நீதிமன்றம், மீனவர்களை ஜூலை 27 ஆம் தேதி வரை சிறைக் காவலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதேபோல், கடந்த 17.6.2017 ஆம் தேதி எல்லை தாண்டியதாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மண்டபம் பகுதி மீனவர்கள் 5 பேர், அந்நாட்டு ஊர்க்காவல் துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இவர்களிடம் விசாரணை மேற்கொண்ட நீதிமன்றம், ஜூலை 27 ஆம் தேதி வரை யாழ்ப்பாணம் சிறையில் அடைக்குமாறு உத்தரவிட்டுள்ளது.