சென்னையின் முக்கிய நகரப் பகுதிகளில் ஒன்றான நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 24-ந் தேதி சூளைமேட்டைச் சேர்ந்த தனியார் நிறுவன மென்பொறியாளர் சுவாதி, வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.
இதில், அந்த ரயில் நிலையத்தில் கண்காணிப்பு கேமரா இல்லாத காரணத்தால் எந்தவித துப்பும் கிடைக்காத நிலையில், குற்றவாளியின் மேம்படுத்தப்பட்ட புகைப்படத்தை காவல்துறை வெளியிட்டது.
இதையடுத்து, சூளைமேட்டில் உள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்த ராம்குமார் மீது சந்தேகத்தின் அடிப்படையில் காவல்துறை கைது செய்து சிறையில் அடைத்தது.
இதனால் மனஅழுத்தம் காரணமாக சிறையில் இருந்த மின்கம்பியை கடித்து தற்கொலை முயற்சியில் ராம்குமார் ஈடுபட்டுள்ளார்.
அவருக்கு சிறையில் இருந்த மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் வழியிலேயே ராம்குமார் இறந்துவிட்டார்.
இந்த கொலை வழக்கு அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால் வழக்கம் போல் இந்த பரபரப்பு சில நாட்களில் காணாமல் போய்விட்டது.
அந்த நேரத்தில் சென்னையின் அனைத்து ரயில் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமரா பொறுத்தப்பட்டு போதிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்நிலையில், சுமார் 1 வருடங்களுக்குப் பிறகு தற்போது நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கண்காணிப்பு கேமரா பொறுத்தப்பட்டுள்ளது.