விழுப்புரம்: குறிப்பிட்ட வகுப்பு மக்களின் மனம் புண்படுமபடியான கருத்துகளை வெளியிடும் ஒரு நிகழ்ச்சியினை நடத்துவதால், நடிகர் கமல்ஹாசன் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று தமிழக சட்டத்துறை அமைச்சர் சண்முகம் கருத்து தெரிவித்துள்ளார்.
பிரபல தமிழ் தொலைக்காட்சி சேனல் ஒன்றில் நடிகர் கமல்ஹாசன் நடத்தும் ரியாலிட்டி ஷோ ஒன்று தொடர்ந்து சர்ச்சைகளை கிளப்பி வருகிறது. அதில் பங்கேற்பாளராக உள்ள நடன இயக்குனர் காயத்ரி ரகுராம் பயன்படுத்திய வாரத்தையொன்று குறிப்பிட்ட வகுப்பு மக்களை அவமானப்படுத்தும்படி அமைந்திருப்பதாக சர்ச்சை எழுந்தது.
இதன் தொடர்ச்சியாக கமலுக்கு எதிராக சில இயக்கங்கள் காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தன. மேலும் அவரது ஆழ்வார்பேட்டை அலுவலகத்தில் போராட்டங்களும் நடத்தப்பட்டன.
பின்னர் இது தொடர்பாக அளித்த பேட்டி ஒன்றில் கமல் தமிழக அரசின் செயல்பாடுகளை விமர்சித்திருந்தார். அது அரசியல் வட்டாரத்தில் சூட்டினைக் கிளப்பியது.
இந்நிலையில் மறைந்த தமிழக முதல்வர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்களுக்கான அடிக்கல் நாட்டுவதற்காக தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் விழுப்புரம் வந்திருந்தார். அப்பொழுது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நடிகர் கமலஹாசன் பணத்திற்காக எதனையும் செய்யக்கூடியவர். தற்பொழுது கூட பணத்தின் பொருட்டுதான் அந்த குறிப்பிட்ட நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்.
குறிப்பிட்ட ஒரு வகுப்பு மக்களின் மனம் புண்படுமபடியான கருத்துகளை வெளியிடும் ஒரு நிகழ்ச்சியினை நடத்துவதால், நடிகர் கமல்ஹாசன் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும்.
இவ்வாறு அமைச்சர் சண்முகம் கருத்து தெரிவித்துள்ளார்.