அரசு குறித்து ஆதாரமின்றி பேசினால் நடிகர் கமல் மீது நடவடிக்கை எடுக்கப்படும்
தமிழக அரசு குறித்து ஆதாரம் இல்லாமல் நடிகர் கமல்ஹாசன் பேசி வருவதை அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்காது; அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் தமிழக செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் செ. ராஜு.
தூத்துக்குடியில் ஞாயிற்றுக்கிழமை அவர் அளித்த பேட்டி: திரைப்படத் துறையில் தமிழக அரசு 457 விருதுகளை ஒரே அறிவிப்பாக அறிவித்ததால் திரைத் துறையினர் அரசை பாராட்டி வருகின்றனர். இதையெல்லாம் பாராட்ட மனமில்லாத நடிகர் கமல்ஹாசன், எப்படி திரைப்படத் துறையில் பணியாற்றுகிறார் எனத் தெரியவில்லை.
தமிழர அரசு குறித்து தொடர்ந்து ஆதாரமில்லாமல் மனம்போன போக்கில் கமல்ஹாசன் பேசினால் அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்காது. அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இரட்டை இலை சின்னம் நிச்சயமாக மீட்கப்படும். தூத்துக்குடி மாவட்டத்தில் நவம்பர் மாதம் 22ஆம் தேதி எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் நடைபெற உள்ளது என்றார் அவர்.