குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாடு முழுவதும் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது.
நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அறை எண் 62-ல் பிரதமர் மோடி வாக்களித்தார். அதேபோல் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது முதல் வாக்கை பதிவு செய்தார். தொடர்ந்து சபாநாயகர் தனபால், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் வாக்களித்தனர்.
குடியரசுத் தலைவர் தேர்தலில் நாடு முழுவதும் 776 எம்.பி.க்கள், 4,120 எம்.எல்.ஏ.க்கள் வாக்களிக்கின்றனர். இன்று பதிவாகும் வாக்குகள், வரும் 20-ஆம் தேதி எண்ணப்படும். அன்றைய தினமே, அடுத்த குடியரசுத் தலைவர் யார் என்பது தெரிந்துவிடும்.
இந்தத் தேர்தலில், ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் ராம்நாத் கோவிந்தும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் சார்பில் பொது வேட்பாளராக மக்களவை முன்னாள் தலைவர் மீரா குமாரும் போட்டியிடுகின்றனர். குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தல் களத்தில் இவர்கள் இருவர் மட்டுமே உள்ளனர். இவர்களில் அதிக வாக்குகள் பெறுபவர், அடுத்த குடியரசுத் தலைவராகப் பதவியேற்பர்.