குடியரசுத் தலைவர் தேர்தல்: புதுவையில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு, 30 எம்.எல்.ஏக்களும் வாக்களிப்பு

நாட்டின் 14-வது குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தலின் ஒரு பகுதியாக புதுவை சட்டப்பேரவையில் திங்கள்கிழமை விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது. 
குடியரசுத் தலைவர் தேர்தல்: புதுவையில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு, 30 எம்.எல்.ஏக்களும் வாக்களிப்பு

நாட்டின் 14-வது குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தலின் ஒரு பகுதியாக புதுவை சட்டப்பேரவையில் திங்கள்கிழமை விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது. 

தற்போதைய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் இம்மாதத்துடன் நிறைவு பெறுகிறது. இதனை அடுத்து புதிய குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் 17-ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. 

பாஜக கூட்டணி வேட்பாளராக ராம்நாத் கோவிந்த், காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் மீராகுமார் ஆகியோர் களம் இறங்கியுள்ளனர். குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு அனைத்து மாநில சட்டப்பேரவை அலுவலகங்களிலும் நடைபெறும்.

அதன்படி புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள கமிட்டி அறையில் வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டுள்ளது. வாக்குப் பதிவுக்காக பாதுகாப்பு முன் ஏற்பாடுகள், ஸ்ட்ராங் ரூம், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துதல் போன்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. 

ஏற்கெனவே மத்திய பார்வையாளர் அருண் யாதவ், மாநில தலைமை தேர்தல் அதிகாரி டாக்டர் வி.கந்தவேலு தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

காலை 10 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. காலை 7.30-9 மணி ராகுகாலம் என்பதால் எம்.எல்.ஏக்கள் சிறிது நேரம் கழித்தே வரத்தொடங்கினர்.

முதலில் அதிமுக எம்.எல்.ஏக்கள் அன்பழகன் தலைமையில் பாஸ்கர், வையாபுரி மணிகண்டன், அசனா ஆகியோர் வாக்களித்தனர். அவர்களைத் தொடர்ந்து பேரவைத் தலைவர் வைத்திலிங்கம் வாக்களித்தார். 

பின்னர் முதல்வர் நாராயணசாமி தலைமையில் அமைச்சர்கள் நமச்சிவாயம், கமலக்கண்ணன், மல்லாடி, கந்தசாமி, ஷாஜஹான், பேரவைதுணைத் தலைவர் விபி.சிவக்கொழுந்து, கொறடா அனந்தராமன், எம்.எல்.ஏக்கள் லட்சுமிநாராயணன், தீப்பாய்ந்தான், விஜயவேணி, தனவேலு, திமுக அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ., கீதா ஆனந்தன் எம்.எல்.ஏ ஆகியோர் ஒன்றாக வந்து வாக்களித்தனர். அவர்களைத் தொடர்ந்து என்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ. திருமுருகன் தனியாக வந்து வாக்களித்தார். சுயேச்சை எம்.எல்.ஏ. பேராசிரியர் ராமச்சந்திரனை வாக்களிக்க முதல்வர் நாராயணசாமி அழைத்து வந்தார். 

பிற்பகல் 12.20 மணிக்கு எதிர்க்கட்சித் தலைவர் ரங்கசாமி தலைமையில் அக்கட்சி எம்.எல்.ஏக்கள் டிபிஆர்.செல்வம், ஜெயபால், சந்திர பிரியங்கா, கோபிகா, சுகுமாறன், அசோக் ஆனந்து ஆகியோர் ஒன்றாக வந்து வாக்களித்தனர். 

காங்கிரஸ் கூட்டணி சார்பில் முதல்வர் நாடாளுமன்ற செயலாளர் லட்சுமி நாராயணன், அதிமுக சார்பில் அன்பழகன், என்.ஆர். காங்கிரஸ் சார்பில் வழக்குரைஞர் பக்தவத்சலம் ஆகியோர் முகவர்களாக செயல்பட்டனர். 

இத்தேர்தலில் காங்கிரஸ் 15, என்.ஆர். காங்கிரஸ் 8, அ.தி.மு.க. 4, தி.மு.க. 2, சுயே 1 உள்பட 30 எம்.எல்.ஏக்கள் தேர்தலில் வாக்களித்தனர்.

புதுச்சேரி மாநில சட்டப்பேரவை உறுப்பினர்களின் வாக்கு மதிப்பு தலா 16 ஆகும். மாநிலத்தில் உள்ள மொத்த மக்கள் தொகைக்கு ஏற்ப எம்.எல்.ஏக்களின் வாக்கு மதிப்பு நிர்ணயிக்கப்படுகிறது. 

நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் ராதாகிருஷ்ணன், மாநிலங்களவை உறுப்பினர் கோகுலகிருஷ்ணன் இருவரும் தில்லியிலேயே வாக்களித்தனர். 

இந்நிலையில் சட்டப்பேரவை வளாகம் முழுவதும் பாதுகாப்பு வளையத்தில் கொண்டு வரப்பட்டிருந்தது. வெளியார் எவரும் உள்ளே நுழைந்து விடாதபடி 2 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

வாக்குப்பதிவு முடிந்த பின்னர் சீலிடப்பட்ட வாக்குப்பெட்டி பலத்த பாதுகாப்புடன் தில்லிக்கு விமானத்தில் உதவித் தேர்தல் அலுவலரும், பேரவைச் செயலருமான வின்சென்ட் ராயரால் கொண்டு செல்லப்படும். அதுவரை சட்டப்பேரவை வளாகம் பாதுகாப்பு வளையத்தில் வைக்கப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com