சென்னை: புகழ்பெற்ற சித்திரவீணை இசைக் கலைஞர் ரவிகிரணுக்கு மியூசிக் அகாடமியின் இந்த ஆண்டுக்கான 'சங்கீத கலாநிதி' விருது வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மியூசிக் அகாடமியின் தலைவர் முரளி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
சித்திரவீணை இசைக் கலைஞர் ரவிகிரணுக்கு மியூசிக் அகாடமியின் இந்த ஆண்டுக்கான 'சங்கீத கலாநிதி' விருது வழங்கப்படுகிறது. அகாடமியின் செயற்குழு உறுப்பினர்களின் ஒரு மனதான முடிவு இது.
மியூசிக் அகாடமி வழங்கி வரும் மழலை மேதைகளுக்கான உதவித்தொகையினை 1996-ஆம் ஆண்டு பெற்றவர் ரவிகிரண். அப்பொழுது அவர் மீது உண்டான நம்பிக்கையை தற்பொழுது முழுவதுமாக அவர் காப்பாற்றியுள்ளார். தன்னுடைய அபாரத் திறமையின் காரணமாக இசையுலகில் கவனிக்கத்தக்க உயரங்களை அடைந்துள்ளார்.
அவருக்கான விருது எதிர்வரும் ஜனவரி 1-ஆம் தேதி வழங்கப்படும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது