தமிழக டிஜிபி ராஜேந்திரன் பணி நீட்டிப்பு தொடர்பான வழக்கு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!
மதுரை: குற்றச்சாட்டில் சிக்கியுள்ள தமிழக டிஜிபி ராஜேந்திரனுக்கு பணி நீட்டிப்பு வழங்கப்பட்ட தொடர்பான வழக்கில், இரு தரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு தேதி குறிப்பிடாமல் நீதிபதி வழக்கினை ஒத்திவைத்தார்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் டி.கே.ராஜேந்திரன் உளவுத்துறை டிஜிபியாக நியமிக்கப்பட்டு, கூடுதல் பொறுப்பாக தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபியாகவும் பொறுப்பை கவனித்து வந்தார். கடந்த மாத இறுதியில் அவர் பணி ஓய்வு பெற இருந்த நிலையில் டி.கே.ராஜேந்திரனுக்கு 2 ஆண்டுகள் பணி நீட்டிப்பு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டது.
இதனை எதிர்த்து மதுரையைச் சேர்ந்தகதிரேசன் என்பவர் மதுரை உயர்நீதி மன்ற கிளையில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். அவர் தனது மனுவில் குட்கா விவகாரத்தில் ராஜேந்திரன் உள்ளிட்டோருக்கு லஞ்சம் வழங்கப்பட்டதாக கிடைக்கும் தகவல்கள் பெரும் புயலை கிளப்பி வரும் நிலையில், டி.கே.ராஜேந்திரனுக்கு மேலும் 2 ஆண்டுகள் பணி நீட்டிப்பு வழங்கியிருப்பது சரியல்ல. எனவே அவரது பணி உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த பொழுது தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், 'டிஜிபி ராஜேந்திரன் மீது குறிப்பிட்ட எந்த ஒரு புகாரும் இல்லை. அத்துடன் பணி நியமனம் உள்ளிட்ட அரசின் முடிவுகளில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று வாதிட்டார்.
இதனைக் கேட்டுக் கொண்ட நீதிபதி தேதி குறிப்பிடாமல் வழக்கினை ஒத்திவைத்தார்.