சென்னை: தலைமைச் செயலத்தில் இன்று நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில், ஓட்டுகள் பதிவான வாக்குப்பெட்டியானது தில்லிக்கு விமானத்தில் கொண்டு செல்லப்பட உள்ளது.
தமிழக தலைமைச் செயலகத்தில் இன்று காலை 10 மணிக்கு குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு துவங்கியது. இதில் 232 ஏம்எல்ஏக்கள் உட்பட 234 பேர் வாக்களித்தனர்.
திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலைக் குறைவு காரணமாக வாக்களிக்க வரவில்லை. அவர் வாக்களிக்க வர வாய்ப்பில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் கூறினார்.
இன்று காலை 10 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு 2 மணி நேரத்துக்குள் முடிவடைந்தது. கேரள எம்எல்ஏ அப்துல்லா, பாஜக எம்.பி. பொன். ராதாகிருஷ்ணன், தமிழக முதல்வர் பழனிசாமி உட்பட 232 எம்எல்ஏக்களும் வாக்களித்தனர்.
இதையடுத்து மதியம் 12 மணியளவில் வாக்குப்பதிவு நிறைவடைந்ததாக அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து வழக்கமான நடைமுறைகளுக்குப் பிறகு ஓட்டுக்கள் பதிவான வாக்குப்பெட்டிக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து இன்று இரவே தில்லிக்கு ஏர் இந்தியா விமானம் ஒன்றில் அந்த வாக்குப்பெட்டியானது எடுத்துச் செல்லப்பட உள்ளது