குறிஞ்சிப்பாடி அருகே தாய், தனது இரு மகன்களை கிணற்றில் வீசி கொன்று விட்டு, தானும் தற்கொலை செய்து கொள்ள முயன்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் முதுநகர் அருகே உள்ள கோதண்டராமபுரத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவரது மனைவி சாய்பாபு (35). இவர்களது மகன்கள் கோஷன் (7), கோகுல் (6). கோதண்டராமபுரத்தில் தனியாக வசித்து வந்த சாய்பாபு, குழந்தைகளின் படிப்பு, குடும்பச் செலவுக்கு உறவினர்கள், தெரிந்தவர்களிடம் கடன் பெற்றதாகக் கூறப்படுகிறது. அதைத் திருப்பிக் கொடுக்க முடியாத சாய்பாபு மன வேதனையில் இருந்து வந்தாராம்.
திங்கள்கிழமை காலை தனது இரு மகன்களை அழைத்துக் கொண்டு சின்ன ராவுத்தன்குப்பம் கிராமத்தில் உள்ள தனியார் நிலத்துக்குச் சென்றவர், அங்கிருந்த கிணற்றில் கோஷன், கோகுல் ஆகியோரை தள்ளிவிட்டு, பின்னர் அவரும் கிணற்றுக்குள் குதித்துவிட்டாராம். இதைப் பார்த்த அங்கிருந்தவர்கள் ஓடி வந்து கிணற்றில் குதித்து மூவரையும் மீட்டனர். இதில், கோஷன், கோகுல் இருவரும் தண்ணீரில் மூழ்கி இறந்தனர். சாய்பாபு உயிருடன் மீட்கப்பட்டார்.
தகவலறிந்த குள்ளஞ்சாவடி போலீஸார் அங்கு வந்து கோஷன், கோகுல் ஆகியோரின் உடல்களைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து குள்ளஞ்சாவடி காவல் ஆய்வாளர் கண்ணன் வழக்குப் பதிந்து, சாய்பாபுவிடம் விசாரணை நடத்தி வருகிறார்.