தஞ்சாவூர் மாவட்டம், கதிராமங்கலத்திலிருந்து ஓஎன்ஜிசி நிறுவனமும், போலீஸாரும் வெளியேற வேண்டும் என்பதை வலியுறுத்தி, அப்பகுதி மக்கள் திங்கள்கிழமை ஒருநாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். கதிராமங்கலத்தில் விவசாயமும், குடிநீரும் பாழ்பட்டு போனதற்கு ஓஎன்ஜிசி நிறுவனம்தான் காரணம் என அந்த கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக போராடிய மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் த.ஜெயராமன் உள்பட 10 பேரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில், கதிராமங்கலத்தில் போலீஸார் குவிக்கப்பட்டு ஊரின் நான்கு எல்லைகளிலும் நிறுத்தப்பட்டுள்ளனர். ஊருக்குள் வரும் இளைஞர்கள், வெளியூர் நபர்களை விசாரித்து அனுப்புவதை போலீஸார் வழக்கமாக கொண்டுள்ளதாக கூறி, போலீஸார் கதிராமங்கலத்தை விட்டு உடனடியாக வெளியேற வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். மேலும், கடந்த 6 நாள்களாக கதிராமங்கலம் அய்யனார்கோயிலில் காத்திருப்பு போராட்டத்தில் மக்கள் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் திங்கள்கிழமை அதே இடத்தில் ஓஎன்ஜிசி நிறுவனமும், போலீஸாரும் ஊரை விட்டு வெளியேற வேண்டும் என்பதை வலியுறுத்தி ஒருநாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
போராட்டக் குழு அமைப்பு
கதிராமங்கலத்தில் 10 தெருக்கள் உள்ளன. ஒரு தெருவுக்கு நான்கு ஆண்கள், நான்கு பெண்கள் என மொத்தம் 80 பேர் கொண்ட போராட்டக்குழு ஞாயிற்றுக்கிழமை இரவு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் போராட்டத்தின் அடுத்த நகர்வுகளை மேற்கொள்ளவும், அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தவும் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அக்கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.