கலாம் மணிமண்டபத்தை வரும் 27-ஆம் தேதி திறந்து வைக்க வருகை தருமாறு பிரதமர் மோடியை அழைத்திருப்பதாக, மத்திய பாதுகாப்பு,ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கழக இயக்குநர் கிறிஸ்டோபர் தெரிவித்தார்.
ராமேசுவரம் அருகே பேக்கரும்பில் குடியரசு முன்னாள் தலைவர் அப்துல்கலாமின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. அங்கு அவருக்கு நினைவிடம் அமைக்கும் பணி நடைபெற்ற வருகிறது. சுமார் மூன்றரை ஏக்கர் நிலப்பரப்பில் கலாமின் நினைவிடம்,அருங்காட்சியகம்,வாகனம் நிறுத்துமிடம்,அலுவலகம்,பூங்கா மற்றும் கலையரங்கம் ஆகியன அமைக்கப்பட்டு பணிகள் நிறைவு பெறும் நிலையில் உள்ளது.
இப்பணிகளை மத்திய பாதுகாப்பு,ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கழக இயக்குநர் கிறிஸ்டோபர் திங்கள்கிழமை நேரில் ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
நாட்டின் பாதுகாப்பு, ஆராய்ச்சி மற்றும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி ஆகியவற்றில் அப்துல்கலாம் ஆற்றிய பணிகள் அளவிட முடியாதது. கலாமின் மணிமண்டப பணிகளை மிகுந்த அர்ப்பணிப்பு உணர்வோடு செய்து வருகிறோம். மணி மண்டபத்தைத் திறந்து வைக்க வருமாறு பாரதப் பிரதமர் நரேந்திர மோடியை அழைத்துள்ளோம். மணிமண்டபம் அருகிலேயே தமிழக அரசு நிலம் ஒதுக்கீடு செய்து கொடுத்தால் நிரந்தர கண்காட்சியும், நூலகமும் அமைக்க பரிசீலனை செய்யப்படும் என்றார்.