தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர்களை தகுதியிழப்பு செய்யக் கோரிய மனு மீதான விசாரணையை ஒத்தி வைத்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.
தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியும் அமைச்சர்களும் பதவியேற்ற பின்னர், சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் வி.கே.சசிகலாவை நேரில் சந்தித்து அரசியல் செயல்பாடுகள் குறித்து விவாதித்தனர்.
அமைச்சர்களின் இந்த செயல் பதவியேற்கும் போது அவர்கள் எடுத்துக் கொண்ட ரகசியக் காப்பு பிரமாணத்தை மீறியதாகும்.
எனவே சிறையில் சசிகலாவை நேரில் சந்தித்த அமைச்சர்களையும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத முதல்வரையும் அவர்களது பதவியில் இருந்து தகுதியழப்பு செய்து உத்தரவிட வேண்டும் என்று ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த டி.அன்பழகன் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு செய்திருந்தார்.
இந்த மனு, நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் அடங்கிய அமர்வு முன்னர் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பு வழக்குரைஞர் வாதிடுகையில், பெங்களூரு சிறையில் சசிகலாவை அமைச்சர்கள் சந்தித்துள்ளது தொடர்பாக பல்வேறு ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன என்றார்.
இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், ஊடகங்களில் வெளிவரும் எல்லா செய்திகளின் அடிப்படையிலும் நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட முடியாது என்றனர்.
பின்னர் இந்த மனுவை விசாரணைக்கு அனுமதிப்பது தொடர்பாக முடிவெடுக்க விசாரணையை ஆகஸ்ட் 1 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.