நடிகர் கமல்ஹாசன் மீது வழக்குப் போடப் போவதாகக் கூறும், அமைச்சர்கள் என் மீது வழக்கு போடத் தயாரா என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார்.
குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களித்த பிறகு சட்டப்பேரவை வளாகத்தில் மு.க.ஸ்டாலின் அளித்த பேட்டி:
பெரும்பான்மை பலத்துடன் இருக்கும் பாஜக, குடியரசுத் தலைவர் தேர்தலில் பொதுவேட்பாளரை நிறுத்துவோம் என்று ஆரம்பத்தில் நாடகம் நடத்தியது. பின்னர், தன்னிச்சையாக ஒரு வேட்பாளரை நிறுத்தியதால், இந்தத் தேர்தலில் வாக்களிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு இருப்பது உள்ளபடியே வேதனையளிக்கிறது.
எனினும், பாஜக நிறுத்தியுள்ள வேட்பாளரை எதிர்த்து 17 கட்சிகள் கூட்டாகச் சேர்ந்து ஒரு வேட்பாளரை நிறுத்தியுள்ளோம். அதுவே ஒரு மிகப்பெரிய வெற்றிக்கு அடிகோலாக அமைந்துள்ளது என்பதுதான் என் கருத்து.
மருத்துவர்கள் அனுமதிக்காததால், இந்தத் தேர்தலில் திமுக தலைவர் கருணாநிதி வாக்களிக்கவில்லை. பிற சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவரும் வாக்களித்துள்ளனர்.
அரசியல்வாதிகள் மட்டுமல்லாமல், வாக்குரிமையைப் பெற்றிருக்கும் அனைவரும் ஜனநாயக ரீதியில் ஓர் அரசை விமர்சிப்பதற்கு எல்லாவித உரிமையும் உண்டு. அந்த அடிப்படையில்தான் நடிகர் கமல்ஹாசன் தன்னுடைய கருத்துகளைத் தெரிவித்துள்ளார். இதற்காக அமைச்சரவையில் உள்ள பலர் அவரை மிரட்டுவது போன்ற ஜனநாயகத்துக்கு விரோதமான செயலில் ஈடுபடுகின்றனர்.
பொத்தாம் பொதுவாக அனைத்துத் துறைகளிலும் ஊழல் நடக்கிறது என்றுதான் கமல் சொன்னார். அதற்கே அவர் மீது வழக்கு போடுவோம் என்று அமைச்சர்கள் சொல்கிறார்கள். ஆனால், ஆதாரங்களோடு சட்டப்பேரவையில் மட்டுமல்ல, மக்கள் மன்றத்திலும் அதிமுகவின் ஊழல்கள் அனைத்தையும் சொல்லி வருகிறேன்.
கமல்ஹாசன் மீது வழக்குப் போடுவேன் என்று சொல்லக்கூடியவர்கள் எங்கள் மீது வழக்கு போடத் தயாராக இருக்கிறார்களா? அப்படி, வழக்குப் போட்டால் அதை நாங்கள் நீதிமன்றத்தில் சந்திப்போம் என்றார்.