கோவை : நடிகர் கமல் அரசியலுக்கு வர துடிப்பது ஏன்? என்று பாஜக தமிழக தலைவர் தமிழிசை சுவுந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து கோவையில் இன்று செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், தமிழகத்தில் நடக்கும் போராட்டங்களை கண்காணிக்க வேண்டும். சமூக விரோதிகளும், பயங்கரவாதிகளும் மாணவர் அமைப்பினர் என கூறிக் கொண்டு போராட்டத்தில் ஊடுருவ திட்டமிட்டுள்ளனர். தமிழகத்தில் பாதுகாப்பிற்காக ஒருவரை கைது செய்தால் அதனை எதிர்ப்பததே எதிர்க்கட்சிகளின் வேலையாகி விட்டது.
திடீரென கமல் அரசியலுக்கு வர துடிப்பது ஏன்? இவ்வளவு நாள் என்ன சமுதாயப் பார்வையோடு இருந்தார், மக்களுக்காக எந்தளவுக்கு போராடினார். எத்தனை சமூக பிரச்னைகளுக்கு குரல் கொடுத்தார் என அடுக்கடுக்கான கேள்வி எழுப்பிய தமிழிசை, ரஜினி ஆரம்பத்தில் இருந்தே சமூக கருத்துக்களை கூறிக் கொண்டு வருகிறார் என்றார்.
மேலும், 1996 ஆம் ஆண்டு முதலே சமூகப் பிரச்னைகளுக்கு முன் நின்றவர். நதிகள் இணைப்பு என்று வந்தவுடன் முதல் ஆளாக நிதி கொடுக்க முன்வந்தார். எம்ஜிஆர், ஜெயலலிதா போல ஆரம்பத்திலிருந்தே அரசியல் களத்தில் ஈடுபட வேண்டும்.
அவருடைய துறையில் அவர் சிறந்து விளங்குகிறார். காசு வாங்கிக் கொண்டு நடிக்கும் கமல், அவருடைய கலைத்துறையில் சிறந்து விளங்குகிறார். நடிகர்கள் அரசியல் கருத்து சொல்வதற்கு நான் எதிரியில்லை. அங்கீகாரம் கிடைப்பதற்காக அரசியலுக்கு வருவதைத் தான் நான் கண்டிக்கிறேன். அரசியல் என்பது இணையத்தில், டிவிட்டரில் அல்ல, மக்கள் தளத்தில், மனதில் உள்ளது என்றார் தமிழிசை.