கோவை: கதிராமங்கலம், நெடுவாசல் திட்டத்திற்கு எதிராக மாணவர்கள் போராடி வருகின்றனர். இதனை கொச்சைப்படுத்தும் வகையில் மாணவர் அமைப்புகள் இடையே தீவிரவாத அமைப்புகள் ஊடுருவி உள்ளதாக தமிழிசை கூறியுள்ளார்.
இதுகுறித்து கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், மாணவி வளர்மதி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டிருப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த தமிழிசை, மாணவர் அமைப்பினரிடையே தீவிரவாத அமைப்புகள் ஊடுருவிவிட்டது என்று குற்றம்சாட்டினார்.
மேலும், மாநில பாதுகாப்புக்காக யாரையாவது கைது செய்தால் அதனை எதிர்ப்பதே எதிர்க்கட்சிகளின் வேலை என்றும் தமிழிசை கூறியுள்ளார்.
கதிராமங்கலம், நெடுவாசல் போராட்டங்களுக்கு ஆதரவாக துண்டறிக்கை கொடுக்கப்பட்டதாக மாணவி வளர்மதி அண்மையில் கைது செய்யப்பட்டார். அவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளது தமிழக அரசு. இதற்கு கடும் எதிர்ப்பு தமிழகத்தில் எழுந்துள்ள நிலையில், பாஜக தலைவர் தமிழிசை, மாணவர் அமைப்பில் தீவிரவாத அமைப்பினர் ஊடுருவியுள்ளனர் என்று கருத்து சொல்லி இருப்பது, போராட்டக்காரர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.