உள்ளாட்சித் தேர்தல்: திமுக மேலும் ஒரு மனு : தேர்தல் ஆணையம், தமிழக அரசுக்கு நோட்டீஸ்

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நீதிமன்றம் நிர்ணயிக்கும் காலவரம்புக்குள் நடத்தக் கோரி திமுக சார்பில் புதிதாக மனு

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நீதிமன்றம் நிர்ணயிக்கும் காலவரம்புக்குள் நடத்தக் கோரி திமுக சார்பில் புதிதாக மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவுக்கு நான்கு வார காலத்துக்குள் மாநில தேர்தல் ஆணையம், தமிழக அரசு உள்ளிட்டோர் பதிலளிக்குமாறு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.எஸ்.பாரதி தாக்கல் செய்த மனு நீதிபதி எம்.துரைசாமி முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் பி.வில்சன், உச்சநீதிமன்றம் மற்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணையின் போது, ஜூலைக்குள் தேர்தலை நடத்தி விடுவதாக மாநிலத் தேர்தல் ஆணையம் தரப்பில் உறுதியளிக்கப்பட்டது.
ஆனால், இதுவரை உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கான எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல், சிறப்பு அதிகாரிகளின் பதவிக் காலத்தை மட்டும் அவ்வப்போது அரசு நீட்டித்து வருகிறது. ஆகையால், நீதிமன்றம் நிர்ணயிக்கும் கால வரம்புக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க உத்தரவிட வேண்டும் என்றார்.
இதனையடுத்து, இந்த மனு தொடர்பாக நான்கு வாரத்தில் பதிலளிக்குமாறு தமிழக அரசு, மாநில தேர்தல் ஆணையம் உள்ளிட்ட எதிர்மனுதாரர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை நீதிபதி எம்.துரைசாமி ஒத்தி வைத்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com