புதுச்சேரி: குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றிபெற்றுள்ள ராம்நாத் கோவிந்திற்கு புதுச்சேரி மாநில முதல்வர் நாராயணசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
குடியரசுத் தலைவர் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் தலைமையிலான வேட்பாளர் மீராகுமாரை வீழ்த்தி பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் பாஜக கூட்டணி வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் வெற்றிபெற்றுள்ளார்.
ராம்நாத் கோவிந்த் வெற்றி குறித்து முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:
குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றிபெற்றுள்ள ராம்நாத் கோவிந்திற்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். அவருடைய வெற்றி எதிர்பார்த்த ஒன்றுதான். அதுமட்டுமல்லாமல் காங்கிரஸ் கூட்டணி கட்சிக்கு இவ்வளவு வாக்குகள்தான் வரும் என்று முன்கூட்டியே தெரியும்.
ஆகவே இந்த வெற்றி எங்களுக்கு ஆச்சரியத்தை தரவில்லை. ராம்நாத் கோவிந்த் பாரபட்சமின்றி இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி விருப்பு வெறுப்பு இல்லாமல் செயல்படுவார் என நம்பிக்கை உள்ளது.
பாஜக மற்றும் கூட்டணி கட்சிகளிடம் உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் துணை குடியரசுத் தலைவர் தேர்தலிலும் அவர்களுடைய வேட்பாளரே வெற்றிபெற வாய்ப்புள்ளது என்றார் நாராயணசாமி.