புதுதில்லி: நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கக் கோரி தில்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ள தமிழக அமைச்சர்கள், இன்று மதியம் ஒரு மணி அளவில் பிரதமரை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
நீட் தேர்விலிருந்து விலக்கு கோரும் தமிழக சட்ட மசோதாவுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்றுத் தருமாறு மத்திய அரசை வலியுறுத்த, தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், நிதி அமைச்சர் டி.ஜெயக்குமார், சட்டத் துறை அமைச்சர் சி.வி.சண்முகம், உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், மற்றும் மின் துறை அமைச்சர் பி.தங்கமணி ஆகியோர் புதன்கிழமை (ஜூலை 19) அன்று இரவு தில்லி புறப்பட்டுச் சென்றனர்.
அவர்கள் இன்று காலை மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டா, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் மற்றும் மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் ஆகியோரை சந்தித்து தங்களை கோரிக்கையை வலியுறுத்தினர். அத்துடன் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கையும் அவர்கள் சந்திக்க முயற்சிகள் எடுத்து வருகின்றனர்.
இந்த சந்திப்புகளின் பொழுது நீட் தேர்விலிருந்து விலக்கு கோரி, தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்றுத் தருமாறு அவரகள் வலியுறுத்தியுள்ளனர்.
இந்நிலையில் தமிழக அமைச்சர்கள் குழுவானது இன்று மதியம் ஒரு மணி அளவில் பிரதமரை சந்திக்க உள்ளதாக தற்பொழுது தகவல் வெளியாகியுள்ளது.