முன்னாள் படைவீரர்களுக்கான மாதாந்திர நிதியுதவிகள், பணப்பயன்கள் அதிகரிக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தார்.
சட்டப் பேரவையில் பொதுத்துறை மானியக் கோரிக்கை மீது புதன்கிழமை நடந்த விவாதங்களுக்குப் பதிலளித்து முதல்வர் பழனிசாமி சார்பில் அமைச்சர் டி.ஜெயக்குமார் வெளியிட்ட அறிவிப்புகள்:
முன்னாள் படைவீரர்களின் வாரிசுகளின் படிப்புக்காக வழங்கப்பட்டு வரும் உதவித் தொகைகள் உயர்த்தி
வழங்கப்படும். அதன்படி, கலை, அறிவியல் படிப்புகளை படிப்போருக்கு ரூ.10,000, தொழில் சார்ந்த படிப்புகள், பட்ட மேற்படிப்புப் படிப்போருக்கு ரூ.25,000, பல் தொழில்நுட்ப பயிலக படிப்புப் படிப்போருக்கு ரூ.20,000, தொழிற்பயிற்சி படிப்பு படிப்போருக்கு ரூ.10,000 என உதவித் தொகை உயர்த்தப்படும்.
மாதாந்திர முதியோர் உதவித் தொகை ரூ.2,500-ஆகவும், மருத்துவ நிதியுதவி ரூ.3,000 வரையிலும் ஈமச்சடங்கு நிதியுதவி ரூ.10,000 வரையும், வருடாந்திர பராமரிப்பு மானியம் பெறும் ஊனமுற்றோருக்கு வீட்டு வரிச்சலுகை மீளப் பெறுதல் ரூ.2,000 வரையும் அளிக்கப்படும்.