சென்னையில் அரசு ஒப்பந்ததாரர் வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை நடத்தினர். இச் சோதனையில் அங்கிருந்து 22 கிலோ தங்கம், ரூ.41 லட்சம் பணம் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
இது குறித்த விவரம்: சென்னை கே.கே.நகரைச் சேர்ந்த கு.தியாகராஜன், அரசு நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரராகவும் அசோக்நகரில் ஒரு தனியார் கட்டுமான நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.
அவர் மீதான வருமான வரி ஏய்ப்பு புகார்களின் அடிப்படையில் சென்னையில் உள்ள அவரது வீடு, அலுவலகம் என 3 இடங்களில் வருமானவரித்துறையினர் புதன்கிழமை திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
இந்தச் சோதனையில், அவர் வரி ஏய்ப்பு செய்தது தொடர்பான முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும் அவரது வீட்டில் இருந்து கணக்கில் காட்டப்படாத 22 கிலோ தங்கம், ரூ.41 லட்சம் பணம் ஆகியவற்றை வருமான வரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
தியாகராஜன் தந்தை குருமூர்த்தி, தமிழக பொதுப்பணித்துறையின் தலைமைப் பொறியாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர் . அதேபோல தியாகராஜன், சில முக்கிய அரசியல்வாதிகளின் நெருங்கிய நண்பர் என்றும் கூறப்படுகிறது.